புதன், டிசம்பர் 28, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 09



வள் வீட்டில் இருந்து அப்பாவின் முரட்டு பிடியில் கிட்டத்தட்ட இழுபட்டபடியே வீடு வந்தேன். கதவை திறந்தவர் வீட்டினுள் கழுத்தை பிடித்து தள்ளினார். வேகமாக உள்ளே சென்ற நான் சுவற்றுடன் மோதி   அப்படியே அருகில் இருந்த கதிரையில் 'பொத்தென்று அமர்ந்தேன். அவமானமும் அழுகையும் என்னை முட்டி மோதிக்கொண்டிருந்தன.

"டேய்.. உனக்கு என்னடா வயசு? இப்பவே உனக்கு கல்யாணம் கேக்குது இல்ல..!
அவ அப்பன் கிட்ட என்ன கேட்ட? வெக்கமா இல்லையா என்றா? முதலில் உனக்கு வெக்கமா இல்லையா....!! என்னத்துக்கு  இங்கே வந்தே... காதலிக்கவா...?!

அப்பா என்னைப்போட்டு உலுக்கிக்கொண்டு இருந்தார். பதில் பேசாது தலை குனிந்து இருந்தேன். கண்களில் இருந்து பொல பொல என்று கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தது.

"எப்படிடா... அவளை தெரியும் உனக்கு?? எத்தன நாள் பழக்கம் இது!! உன்ன சொல்லி குற்றமில்லை அவளைச்சொல்லனும்.. எவன் கிடைப்பான் என்று அலைஞ்சிட்டு இருந்திருக்காள் போல இருக்கு. அதான் வெளிநாட்டில் இருந்து வந்த இளிச்சவாய் நீ கிடைச்ச,  கெட்டியா பிடிச்சுட்டா.  பணத்துக்கு பணம் சுகத்துக்கு சுகம் அதுதான அவளுக்கு தேவை... அவளுக்கு காதலுக்கு ஆள் தேவைப்படல படுக்கிறதுக்கு ஆள் தேவைப்படுது அதான்.. இவளெல்லாம்...."

"அப்பா....." உடம்பில் இருந்த அத்தனை பலத்தையும் திரட்டி வீடே அதிரும்படி உரக்க கத்தினேன்.

"என்னடா... சவுண்டு விடுற, ஓ.. அவ்ளோத்துக்கு பெரிய ஆள் ஆகிட்டீயா?? அங்க சொல்ல இங்கே வலிக்குதோ... உண்மைய சொல்லும்போது பொத்திட்டு இருக்கணும்... அவளையும் அவ குடும்பத்தை பற்றியும்தான் ஊரே சிரிக்குதே... இதில் நான் வேற புதுசா சொல்லனுமா.... அவ அப்பனுக்கு வேலை வெட்டியில்லை. ஆனா அவள்! நல்லா தின்று  கொளுத்து ஆளை மயக்கிற அளவுக்கு எப்படி இருக்கிறா... போடா போ...
போய் அவளிட்டையே கேளு.. என்னை மாதிரி இன்னும் எவன் எவனோட எல்லாம் சுத்திர என்று."

கழுத்தை இறுக்கி தள்ளினார். திமிறிக்கொண்டு நின்று கண்களில் தீப்பொறி பறக்க அவரை பார்த்தேன்.

"போதுமப்பா... நிப்பாட்டுங்க. அவளை அசிங்கப்படுத்திறதா நினைச்சு உங்க மனசுக்க இருக்கிற வக்கிரத்தை வெளில கொட்டாதீங்க.... நல்ல வேளை உங்களுக்கு கடவுள் ஒரு பொம்புள  பிள்ளையை கொடுக்கல்ல..." விரக்தியாய் சிரித்தபடியே சொன்னேன்.

அடுத்தகணம் அப்பாவின் கைகள் என் கன்னங்களை  மாறி மாறி பதம் பார்த்தது. கத்தியபடியே பிடிக்க வந்த அம்மாவும் அப்பம்மாவும் அப்பா பார்த்த உக்கிரபார்வையில் ஒடுங்கி சுவற்றுடன் சாய்ந்தபடி வாய்பொத்தி அழுதுகொண்டிருந்தார்கள். நான் அவர் அடிக்கும் அடிகளை தடுக்க கூட விரும்பாமால் கல்லு மாதிரி நின்றேன்.

அடிப்பதை நிறுத்தியவர்.  அம்மாவை பார்த்து..

"வெளிக்கிடு... இப்பவே உடனேயே கொழும்பு போறோம்.. டேய் உன்னையும் தான் உடனே உடனேயே..." முதுகில் கைவைத்து தள்ளிவிட்டு, வெளியே போக எத்தனித்தார்.

"நான் வரல்ல..." அழுத்தமாகவே சொன்னேன்.

போனவர் திரும்பி என் அருகே வந்தார்.

"ஓ... அப்போ சார் வரல்ல...  இங்கே இருந்து என்ன பண்ணபோறீங்க!! அந்த மானம்கெட்டவள கட்டப்போறீங்களோ..!!"

"அப்பா... திரும்பவும் சொல்லுறேன். அவளைப்பற்றி விமர்சிக்கிறத நிறுத்துங்க.. அந்த உரிமை உங்களுக்கு மட்டும் அல்ல  யாருக்குமே இல்ல ... என்னை அடியுங்க கொல்லுங்கோ அதுக்கு மட்டும்தான் உங்களுக்கு உரிமை இருக்கு." அவர் கண்களை நேரே பார்த்தபடியே அழுத்தமாக கத்தி  சொன்னேன்.

என் கண்களில் தெரிந்த அனலும் உறுதியும் அவரை கொஞ்சம் தடுமாறவே செய்தது. சட்டென தன் குரலை தாழ்த்திக்கொண்டார்.

"சரி... எவ எப்படியிருந்தா எனக்கென்ன.. இப்போ நீ வாறீயா..??  இல்லையா?? என் கண்களை உற்றுப்பார்த்தபடியே கேட்டார்.

"சாரிப்பா... நான் வரல்ல... இதுக்கு மேலே என்னை கட்டாயப்படுத்தினால் என்னை உயிரோடேயே பார்க்க மாட்டீங்க.." என் கடைசி ஆயுதத்தை கையில் எடுத்தேன்.

அம்மா பதறியடித்துகொண்டு என்னருகே வந்தார். அப்பா..!!!
அதை அலட்சிய படுத்தியவராக, அம்மாவை பார்த்து சொன்னார்.

"கார் வெளிலே ரெடியாவே இருக்கு.. சாமான்கள் எல்லாவற்றையும் ஏற்று உடனே கிளம்புறோம்.." சொல்லியபடியே என்னைப்பார்த்தார்.

"என்ன சார் அப்படிப்பாக்குறீங்க... உங்களுக்கே அவ்ளோ இருந்தா எனக்கு எவ்ளோ இருக்கும்!! நீ விரும்பின மாதிரி இங்கேயே நில்லு.. அல்லது முதல் சொன்னது, அதான் செத்திருவேன் எண்டியே.. இதில் எதையாவது உன் விருப்பப்படி செய். ஆனா... ஒன்று இதில் எது நடந்தாலும் அதை தொடர்ந்து போகபோறது என்றையும்  என் பொண்டாட்டி உயிரும்தான். என்னைப்பற்றி உனக்கு நல்லாவே தெரியும் என்று நினைக்கிறேன்.." என் கண்கள் பார்த்து சொன்னார்.

இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அப்பாவை பற்றி எனக்கு நன்கு தெரியும். எடுத்த முடிவுகளில் இருந்து எப்போதும் பின் வாங்க மாட்டார். எப்படியும் அவள் கிடைப்பாள் என்று இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கைகளும் கண் எதிரேயே சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது. சொல்லிவிட்டு நகர்ந்த அப்பாவை பரிதாபமாகவே பார்த்துகொண்டு நின்றேன்.

அப்பம்மா தரையில் அமர்ந்து அழுதபடியே இருந்தார். அப்பாவும் அம்மாவும் காரில் சாமான்களை ஏற்றுவதில் குறியாக இருந்தார்கள். வெளிக்கிடும் நேரமும் நெருங்கி விட்டது.  ஏதோ ஒரு உச்சி மலையில் இருந்து யாரோ என்னை தள்ளிவிட்ட உணர்வு. என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தேன். போனால் சுலக்க்ஷிகா இல்லை. நின்றால் அப்பா சொன்னதை செய்துவிடுவார்.. மனம் மிக பெரிய போராட்டத்தில் சிக்கி சிதறி நரக வேதனையை தந்து கொண்டிருந்தது.

அப்பா காரில் ஏற.. ஓடிப்போய் அவர் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டேன்.

"அப்பா.. ப்ளீஸப்பா.... என்னை விட்டுட்டு போகாதீங்கோ.. அவ எனக்கு வேணுமப்பா... அவ ரெம்ப நல்லவ அப்பா... என்னை பிரிஞ்சா அவ உடைஞ்சு போயிடுவாப்பா.. என்னாலையும் அவ இல்லாம வாழவே முடியாது.. அவ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால ஜடம் போலதான் வாழ முடியும். ப்ளீஸ் புரிஞ்சுகோங்க.. அப்பா எனக்கு அவ வேணுமப்பா....ப்ளீஸ்.." அப்பாவின் கைகளை நெஞ்சோடு அணைத்தபடி கெஞ்சி கதறினேன்.

என் கைகளை உதறியவர். கார் கதவை திறந்து உள்ளே போய் அமர்ந்துகொண்டார்.

பின்னால் வந்த அம்மாவை பரிதாபமாக பார்த்தேன்.

அப்பாவையும் என்னையும் மாறி மாறிப்பார்த்தவர் பொங்கி வந்த அழுகையை கைகளால் அடக்கியபடியே உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.

அப்பம்மா வீட்டை விட்டு வெளியேயே வரவில்லை. கார் புறப்பட ஆயுத்தமானது. சில வினாடிகளில் கார் அப்பம்மா வீடைவிட்டு விரைய தொடங்கியது.  என் நிலையை என் உணர்வுகளை என் துடிப்பை எந்த வார்த்தைகள் கொண்டு சொல்லிவிடுவது என்று எனக்கு தெரியவில்லை.

சட்டென காரின் பின்னால் ஓட தொடங்கினேன்.

சென்ற கார் சடார் என பிறேக் அடித்து நின்றது.

ஓடிச்சென்று கார் கதவை திறந்து உள்ளே அமர்ந்துகொண்டேன்.

அப்பாவின் முகத்தில் சந்தோஷ ரேகைகள். அம்மா அழுதபடியே என்னை அணைத்துக்கொண்டார். திமிறியபடியே அவர் அணைப்பை தட்டி விட்டு விறைப்பாய் இருந்தேன்.

கார் அவள் வீட்டையும் கடந்து விரைந்து கொண்டிருந்தது. அவள் வீட்டு வாசல் கதவோடு ஒட்டியபடி எங்களை பார்த்துகொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் நான் அவளையோ  அவள் வீட்டையோ  திரும்பி கூட பார்க்கவில்லை. பார்க்கும் அந்த சக்தியும் எனக்கில்லை.

கொழும்பு வந்து சில தினங்கள் அவள் பற்றிய நினைவுகளுடன் நரகமாக கழிந்த பின் ஒரு வழியாக உயிரையும் உணர்வுகளையும் அவளிடம் தொலைத்துவிட்டு வெறும் ஜடமாக பிராண்ஸ் வந்து சேர்ந்தேன்.

பிராண்ஸ் வந்தும் அவளை மறக்க முடியாமல் தினம் தினம் செத்துக்கொண்டிருந்தேன்.

மீண்டும் அவளை பார்ப்பதர்க்கும் அவளுடன் சேர்வதற்கும் நான் எடுத்த முயற்சிகள் பிடிவாதங்கள் எல்லாம் அப்பா அம்மா முன் தவிடு பொடியாக..
"அவள்" எனக்கு நிறைவேறாத கனவு என்பதை மெல்ல மெல்ல உணர தொடங்கினேன்.

சில வருடங்களின் பின் நான் வழமையான என் வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்ப தொடங்கிவிட்டேன். ஆனாலும் அவள் நினைவுகள் மட்டும் என்னை அடிக்கடி தீண்டி தீண்டி ரணமாக்கி கொண்டிருந்தன. அவள் இனி எப்போதும் எனக்கு கிடைக்க மாட்டாள் என்ற முடிவுக்கு நான் வந்ததால் அந்த ரண வலி மிக அதிகமாகவே என்னை வாட்டியது. ஆனாலும் அவளுக்கும் எனக்குமான உறவு அவ்ளோ சீக்கிரத்தில் முடிந்துவிடும் உறவா.. என்ன?!!!

இனி எப்போதும் இலங்கை போக முடியாது அவளை பார்க்கவே முடியாது என்றிருந்த எனக்கு அந்த சந்தர்ப்பம் இதோ.. இவ்ளோ சீக்கிரம் ஒரு துயர செய்தி மூலம் வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க வில்லை.

"அப்பம்மாவுக்கு சீரியஸ் உடனே வரவும்" என்ற அந்த அவசர செய்தியால் பதறியடித்தபடி வெளிக்கிட்ட நாங்கள் இதோ அப்பம்மா வீட்டை நெருங்கிகொண்டிருக்கிறோம்.

அப்பாம்மாவின்  நிலையை நினைத்து மனசு துடித்தாலும், மீண்டும் அவளை பார்க்கு போகிறேனே.. பேசப்போகிறேனே.. என்று நினைக்கும்போது மனசு சந்தோஷத்தில் வானில் சிறகடித்து பறக்க தொடங்கியது.

அடுத்த பகுதியில்.. முற்றும். 


வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 01 
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 03 
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 04 
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 05 
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா..06 
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 07 
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 08




ஞாயிறு, டிசம்பர் 25, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 08

வளின் முரட்டுத்தனமான அணைப்பில் நான் கட்டுண்டு கிடந்தேன். எவ்வளவு நிமிடங்கள் கரைந்திருக்குமோ தெரியாது.. அவள் தன் அணைப்பில் இருந்து என்னை விலக்கும்போதுதான் சுயநினைவு பெற்றேன். விலகியவள் மறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.

"சாரி.. ஆர்ணி, மன்னிச்சுக்கொள் இது என் தப்புத்தான்" கண்களை துடைத்தபடியே சொன்னவள். "ஆர்ணி இதற்குமேல் நாம ரெண்டு பேரும் சந்தித்துக்கொள்ளுவது நல்லதல்ல, நான் என் முடிவில் உறுதியாகவே இருக்கேன். நான் எந்தவிதத்திலாவது உன் மனசை காயப்படுத்தி இருந்தால் மன்னித்துகொள்.. இதுதான் நான் உன்னைப்பார்க்கும் கடைசி சந்தர்ப்பமாக இருக்கட்டும்." சொல்லிவிட்டு என்னை சில வினாடிகள் பார்த்தாள். அழுது சிவந்திருந்த அந்த கண்களில் ஏக்கமும் காதலும் வலியும் நிறைந்திருந்தது.

நான் விரக்தியாக அவளைப்பார்துக்கொண்டிருந்தேன்.. என் பார்வையில் இருந்து தன்னை விலக்கியவள், கண்களை துடைத்தபடி மழைக்குள் இறங்கி தன் வீட்டை நோக்கி ஓடத்தொடங்கினாள். இருட்டினுள் அவள் உருவம் மறையும் வரை சிலையாக நின்று அவளை பார்த்துக்கொண்டே நின்றேன்.

ன்றைய சந்தோஷமும் வலியும் நிறைந்த அந்த சந்திப்பின் பிறகு அவள் என் கண்களில் படவேயில்லை. அதன் பின் அவள் என்னை சந்திக்க வருவதும் இல்லை. அவள் என்னை தவிர்ப்பது தெளிவாக தெரிந்தது.

கடைசி சந்திப்பில் அவளின் முரட்டு அணைப்பில் நான் சிக்குண்டு இருந்த அந்த நிமிடங்கள் மனசுக்குள் வந்து இன்பத்தை சுரக்க வைத்து கொண்டிருந்தன.

அடிக்கடி எங்கள் வீட்டு முற்றத்து வேப்பமரத்தடியில் நின்று அவள் வீட்டை நோட்டமிட்டபடியே இருந்தேன். அவள் வீட்டு முற்றத்தில் கூட ஆட்கள் நடமாட்டம் இல்லை. வழமைக்கு மாறாக அவள் வீடு பெரும் அமைதியாக இருந்தது. இந்த அமைதி பின்னால் வரப்போகும் பெரும் பூகம்பத்துக்காகத்தான் என்று அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

இரண்டு நாட்களாக அவளை காணாததால் மனசளவில் ரெம்ப சோர்ந்துபோய் இருந்தேன். அவளுக்கு என்ன ஆச்சோ..! என்ற பதட்டம் வேறு. அடிக்கடி முற்றத்துக்கு போய் அவள் வீட்டை பார்ப்பது வருவதுமாக இருந்தேன். என்னுடைய இந்த செய்கைகளை வீட்டினுள் இருக்கும் கண்கள் சந்தேகத்துடன் நோக்கத்தொடங்கின. நான் பிராண்ஸ் போகும் நாட்கள் வேறு நெருங்கிக்கொண்டிருந்தது.

அன்று வலுக்கட்டாயமாக அம்மா கடைக்கு இழுத்துவந்திருந்தார். "ப்ளீசம்மா.. சீக்கிரம் வீட்டுக்கு போவோம்" ஒரு ஜம்பது தடவைகளுக்கு மேல் சொல்லியிருப்பேன். இறுதியில் ஒருவாறு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தோம். இன்று ஏதோ நடக்கப்போகிறது என்று மனசு ஒருவித வலியுடன் சொல்லிக்கொண்டே இருந்தது.

என் மனதின் உணர்வுகளை உறுதிப்படுத்துவதுபோலவே தூர வரும்போதே அவள் வீட்டை சுற்றி நின்ற கூட்டம் மனதினுள் கிலியை ஏற்படுத்தியது.

இதயம் படு வேகமாக துடிக்க, உடம்பெல்லாம் திகில் பரவ..  அவள் வீட்டை நெருங்கிய எங்கள் கார் நிறுத்தின பாதி நிறுத்தாத பாதி இருக்கும்போதே கார் கதவுகளை திறந்தபடி அவள் வீட்டை நோக்கி ஓடினேன்.

அங்கு நான் கண்ட காட்சி என்னை அடியோடு நொறுங்க செய்தது. காட்டுப்பூனையின் வாயில் அகப்பட்ட முயலைப்போல அவள் தகப்பனின் அடிகளில் விழுந்து துவண்டு திணறி தடுமாறிக்கொண்டிருந்தாள்.

திடீரென உருப்பெற்றவள் போல் எழுந்து ஆக்ரோஷமாய் தகப்பனை தள்ளி விட்டபடியே வெறிபிடித்தவள் போல் கத்த தொடங்கினாள்.

"தூ... நீயெல்லாம் என்ன மனுசனைய்யா.. என்னை அடிக்கிறதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு. நீ ஒரு நல்ல தகப்பனாவும் இல்ல.. நல்ல மனுஷனாகவும் இல்ல.. உனக்கெல்லாம் எதுக்குய்யா கல்யாணம் மனுஷி பிள்ளைங்க..!!!!?? உன்னோடட இயலாமைய மறைக்க வேஷம் போட்டு எங்களை ஏன் தினம் தினம் சித்திரவதை பண்ணுற....." அவள் ஆவேசமாய் கத்த, அவர் மேலும் மேலும் நாகரீகமற்ற சொற்கள் கொண்டு திட்டியபடியே  உக்கிரமாய் அவளை தாக்குவதிலேயே குறியாக இருந்தார்.

அவள் அம்மா இடையில் சிக்குண்டு சின்னபின்னமாகிக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் அடிகளை எல்லாம் அலட்சியமாக தாங்கியபடியே இதுவரை காலம் வைத்திருந்த பொறுமைகள் எல்லாம் இழந்தவளாக கதறி கதறி அவரை நோக்கி கேள்விக்கணைகளால் துளைத்துகொண்டிருந்தாள். அவள் மேலான அவரின் உக்கிரமும் எல்லையை தாண்டிக்கொண்டிருந்தது.

அதுவரை நேரமும் திக்குபிரமை பிடித்து நின்ற நான் என் கைகளை இறுக பற்றியிருந்த அப்பாவின் கைகளை உதறிவிட்டு அவளை நோக்கி ஓடினேன்.

அவர் பிடியில் இருந்து வலுக்கட்டாயமாக மீட்டு, அவர் கைகளில் சிக்குண்டு இருந்த அவள் கூந்தலை விடுவித்து அவளை இழுத்து என் பின்னால் விட்டுக்கொண்டேன்.

சுற்றி நின்ற கூட்டத்தினுள் சலசலப்பு. ஆளுக்கொருவர் ஒவ்வொரு விதமாய் பேச, அதுவரை அதிர்ச்சியில் நின்ற அவள் அப்பா ஆவேஷமாய் என்னை தள்ளியபடியே.. என் சேட்டை இழுத்து பிடித்து உலுக்கியபடியே..

"என்ன பஞ்சாயத்து பண்ணுறீயா ?? வெளில போடா நாயே.. என் பொண்ணுடா.. அடிப்பேன் உதைப்பேன் முடிந்தால் கொலை கூட பண்ணுவேன். கேக்குறதுக்கு இங்கே எந்த நாய்க்கும் உரிமையில்லை.. முதல்ல வெளில போடா.... போடாங்கிறேன்...." அவர் என் நெஞ்சை இடித்து தள்ள நான் திமிறிக்கொண்டே

"பெத்த பெண்ணையே இப்படி போட்டு தாக்குறீயே..  உனக்கு வெக்கமா இல்ல? நீயெல்லாம் ஒரு ஆம்பிளை!! சீ..........." நானும் பதிலுக்கு கத்த, அவர் என்னையும் கண்டபடி தாக்க தொடங்கினார்.

அதுவரை நேரமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் இடையில் பூர, சுலக்க்ஷிகா வீட்டு முற்றம் யுத்த பூமியாக மாறத்தொடங்கியது.

கூட்டத்தினுள் ஒரு கரம் என்னை ஆதரவாய் பற்ற திரும்பினேன். சுலக்க்ஷிகா!! கண்களில் நன்றியும் காதலும் நிறைந்திருந்தது. அவள் உதடுகள் துடித்துகொண்டிருந்தது.. என் கைகள் இறுக பற்றிக்கொண்டாள்.

"ஆர்ணி.. என்னைக்கல்யானம் பண்ணிக்கிறீயா?? என்னை எங்காவது உன் கூட கூட்டிட்டு போயிறேன் ப்ளீஸ்.. எனக்கு யாருமே வேண்டாம் நீ மட்டும் போதும். உயிர் போறவரைக்கும் உன் கூடவே இருக்கணும் போல இருக்குடா......" அவள் என் கைகளை பிடித்து தன் நெஞ்சோடு அணைத்தபடியே சொல்ல... நான் சொல்ல வார்த்தைகள் அற்று உதடுகள் துடிக்க அவளை பார்த்துகொண்டிருந்தேன்.

அதே நேரம் ஒரு முரட்டு கரம் என்னை இழுக்க திரும்பினேன்.. எதிரே என் அப்பா. அடுத்தகணமே என் கன்னத்தை அவர் கரம் பதம் பார்த்தது. நான் பொறிகலங்கி பார்த்துகொண்டு நிக்கும்போதே அப்பா என் கைகளை இழுத்துக்கொண்டு வேகமாக நடக்கதொடன்கினார்.

என் மறுகையை பற்றி நின்ற அவளின் கைகள் நழுவ தொடங்கின.. அவள் ஏக்கமாகவும் பரிதாபமாகவும் என்னை பார்த்துகொண்டிருந்தாள்.

"உடனே பிராண்ஸ் போறோம், இன்று இரவே கொழும்பு வெளிக்கிடுறோம்.."   அருகில் பதறியபடி வந்த அம்மாவிடம் அப்பா சொல்லியபடி என்னை இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்.

எனக்கு எதுவும் காதில் விழவில்லை.. அவள்தான் என் கண்களில் தெரிந்துகொண்டிருந்தாள்.. "என்னை எங்காவது உன் கூட கூட்டிட்டு போயிறேன் ப்ளீஸ்.." என்ற அவள் வார்த்தைகள்தான் என் காதுகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தன..


தொடரும்...

செவ்வாய், டிசம்பர் 20, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 07

"என் மேலான உன் காதல் எதுவரைக்கும்... நீ பிரான்ஸ் திரும்பும் வரைக்குமா?" என்று அவள் என் காதலை அலட்சிய படுத்தி கேட்டாலும் அதில் அவள் சம்மததுக்கான அறிகுறிகள் கொஞ்சம் பொதிந்து கிடைந்தமை எனக்குள் சந்தோஷத்தை உண்டுபண்ண உற்சாகமாக பேச தொடங்கினேன்.

"சுலக்க்ஷிகா.. என்னை புரிஞ்சுக்கோ, இப்பவே என்னால உன்னை பிரான்ஸ் கூட்டிட்டு போக முடியும்.. எங்க வீட்டுகாரங்க மேலேயும் எனக்கு நம்பிக்கை இருக்கு அவங்களுக்கு என் பிடிவாதமும் உறுதியும் நன்றாகவே தெரியும், அதைவிட எங்க வீட்டுக்கு ஒரே பையன் நான். என் சந்தோஷமும்  அவங்களுக்கு முக்கியம் இல்லையா?  சுலக்க்ஷிகா எனக்கு நீ சம்மதம் தந்தாள் மட்டும் போதும்.. அதற்கு பிறகு எல்லோரிடமும் சம்மதம் வாங்கிறதும் உன்னை என்னோடு கூட்டிப்போவதும் என் பொறுப்பு. நீ உன் குடும்பத்தை நினைத்து கவலைப்படாதே.. நாம தூர இருந்தாலும் அவங்களையும் நல்லா பார்ப்போம். கொஞ்ச நாள் போனபிறகு உன் தம்பியையும் எங்க கூட கூப்பிட்டு நல்லா படிக்க வைப்போம். ப்ளீஸ்... நீ மட்டும் எனக்கு சம்மதம் சொல்லு அது போதும் எனக்கு.. ப்ளீஸ்..."  நான் கெஞ்சும் குரலில் சொல்ல..


"முடியாது ஆர்ணி.. நீ நினைக்கிற எதுவுமே ஒரு போதும் நடக்காது.." தீர்க்கமாய் வந்தது அவள் பதில்.


நான் அதிர்ச்சியோடு அவளைப்பார்த்தேன்.


"ஆர்ணி.. நீ இவ்ளோ சுயநலக்காரனாய் இருப்பாய் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல்ல..  உன் பணத்தைக்காட்டி என்னை வாங்கலாம் அல்லாட்டி மயக்கலாம் என்று நினைக்கிறியா? உன்னை கல்யாணம் பண்ணி உன் பணத்தில்தான் என் குடும்பத்தை கரை சேர்க்கணும் என்ற எந்த தேவையும் எனக்கில்லை.. அப்படிப்பட்டவளும் நான் இல்லை.. சரி அதைவிடு வேற என்ன சொன்ன..! நான் சம்மதிச்சா.. பிரான்ஸ் வரணுமாம்!! ஏன் நீ என் கூட இங்கே இருக்கமாட்டியா? இங்கே பார்.. எனக்கு எப்படி என் குடும்பமோ அதற்க்கு ஒரு படி மேலேயே என் நாடு. இதில் என்னென்ன பிரச்சனைகள் வந்தாலும் யாருக்காகவும் இவை இரண்டையும் உதறிட்டு என்னால் வரமுடியாது.." கடைசி வரிகளை அழுத்தமாக சொல்லிவிட்டு என்னைப்பார்த்தாள்.


பேச திரணியற்று மிச்சம் இருந்த கொஞ்ச நம்பிக்கைகளும் உடைந்து போக கண்ணீர் முட்டிய கண்களுடன் அவளை பார்த்துகொண்டு நின்றேன்.


"சரி.. ஆர்ணி, நீதானே என்னை ரெம்ப நேசிக்கிறதா சொன்ன..  அது உண்மையா இருந்தா நீ இங்கயே என் கூட தங்கிடேன்.  என்ன அப்படிப்பாக்கிற..! எனக்கு வாழ்க்கையில் பெருசா எந்த ஆசைகளும் கனவுகளும் இல்லை. மானத்தை காப்பாற்ற துணி.. உயிரை காப்பாற்ற சாப்பாடு இது மட்டும் போதும்டா.. நீ இங்கே தங்கி இதை உன்னால் செய்யமுடியும் என்றால் சொல்லு, இப்பவே இந்த நிமிஷமே உன் கூட வர நான் தயார்.. சொல்லு ஆர்ணி உன்னால முடியுமா..?"


நான் தடுமாறி ஏதோ சொல்ல எடுக்க கையமர்த்தி தடுத்தவள்.


"உன் காதல் என்ற போர்வையிலே தயவுசெய்து முடியும் என்று மட்டும் பொய் சொல்லிடாத.. எனக்கு தெரியும் ஆர்ணி உன்னால கண்டிப்பா முடியாது. என்னதான் நான் உன்னை பாதித்து இருந்தாலும் பெத்த அப்பா அம்மாவை விட்டு இங்கே என் கூட உன்னால் இருக்க முடியாது. அப்படி இருந்தாலும் அங்கு தொட்டதுக்கெல்லாம் காரில் போன உன்னால் இங்கே நடந்து ஒரு கிராமத்தானாய் வாழ முடியாது.. நீ இப்போ படித்துகொண்டு இருக்கிறாய், இன்னும் கொஞ்ச காலம் போக அங்கே நல்ல ஒரு வேலை எடுப்பாய். ஆனா இங்கே நீ என் கூட தங்கினா.. உன் அங்கத்தைய படிப்புக்கு இங்கே என்ன வேலை இருக்கு? அப்போ எப்படி என்னை வைத்து காப்பாற்றுவாய்? சேற்றுக்க கால் வைத்து தோட்ட வேலை செய்வியா ? அதெல்லாத்தையும் உன்னால் செய்யமுடியுமா? யோசிச்சு பார்.. ப்ளீஸ்டா..  எனக்காக யாரும் கஸ்ரப்பட வேண்டாம்.  ஆர்ணி..  எதுவும் வேண்டாம்டா.. என்னை விட்டுடேன்.. ப்ளீஸ்... அவள் உடைந்துபோய் சொல்ல நான் உள்ளே உடைந்து நொறுங்கிக்கொண்டிருந்தேன்.


மீண்டும் அவளே தொடர்ந்தாள். "ஆர்ணி.. நீ என்னை கட்ட உன் குடும்பம் சம்மதிக்கும் என்று என்னதான் சப்பக்கட்டு கட்டினாலும் உன் குடும்பம் இதற்க்கு ஒரு போதும் சம்மதிக்காது.. இந்த கிராமத்தில் எங்க குடும்பத்துக்கு இருக்கிற 'நல்ல பெயர்' அப்படிடா.. ஒரு வேளை அவர்கள் சம்மதித்தாலும்! என் நாட்டை.. இந்த கிராமத்தை.. பழகின முகங்களை.. நடந்து திரிந்த வீதிகள்.. எல்லாத்தையும்டா.. எல்லாத்தையும் என்னால் விட்டுட்டு உன் கூட வரமுடியாது.. ப்ளீஸ் போதும்.. இதுக்கு மேலே என்ன பேச வைக்காதே... நான் ரெம்ப நொந்துபோய் இருக்கேண்டா.. வேணாம்டா.. என்னை விட்டுடேன்.. நான் போறேன்.."  தழுதழுத்த குரலில் சொன்னாள். அழுதழுது அவள் கண்கள் சிகப்பாகியிருந்தது.


"சுலக்க்ஷிகா உன் மனசை தொட்டு சொல்லு.. என்னை நீ லவ் பண்ணல்ல..? சொல்லு சுலக்க்ஷிகா.. என்னை உனக்கு புடிக்கல்ல..?!"  மனதில் நிறைந்த ஒட்டுமொத்த வலிகளையும் வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கேட்டேன்.


கண்களில் தடம்புரளும் கண்ணீரை துடைத்தபடி விரக்தியாக புன்னகைத்தபடி சொன்னாள்.  "யார் யாரைத்தான் காதலிக்கல்ல.. சொல்லு? அவங்க எல்லாம் காதலிச்சவங்கலையா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? இன்றைக்கு கல்யாணம் கட்டி புள்ளைகுட்டி என்று இருக்கிறவங்க எல்லோர் மனசிலையும் ஒரு உடைந்துபோன காதல் ரணமாய் இருக்கும்.. அவங்க எல்லாம் வாழலையா...?" எங்கையோ வெறித்து பார்த்தபடி சொன்னாள்.


அதற்கு மேல் எதையும் பேச பிடிக்காமல் அமைதியாக நின்றேன். இதயத்தை யாரோ துண்டு துண்டாய் அறுப்பதை போல் வேதனை. அவளும் அதே நிலையில்தான் நின்றாள்.


இருண்ட மேகங்கள் மேலும் இருள..  மழை கொட்ட தொடங்கியது. அந்த உடைந்த கட்டிடத்தின் உள்ளே சென்று மழைத்துளிகள் படாது ஓரமாய் நின்றுகொண்டேன். அவளும் என் பின்னால் வந்து அந்த சிறிய இடத்திற்குள் என்னருகே நெருக்கமாக நின்றுகொண்டாள். மழைக்காற்று தூவானமாய் அடிக்கடி இருவரையும் நனைத்துகொண்டிருந்தது. இருள் வேறு இருக்கும் கொஞ்ச கொஞ்ச பகளையும் விழுங்கி கொண்டிருந்தது. நான் மார்புக்கு நடுவே கைகளை இறுக கட்டியபடி மழைக்குளிரில் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தேன்.


அவள் தூரத்தில் இருளில் மறையும் தன் வீட்டையே பார்த்துகொண்டிருந்தாள். அவள் முகம் அந்த சோகமான நிலையிலும் மழை மின்னலின் வெளிச்சத்தில் பளிங்கு போல் மின்னியது. பின்னிய அவள் கூந்தலில் இருந்து கலைந்த முடிகள் மழை நீர் பட்டு அவள் முகத்தில் ஒட்டியிருந்ததமை  அவளை ரவிமர்மன் வரைந்த ஓவியம்போல் அழகாக காட்டிக்கொண்டிருந்தது. அவளின் சிவந்த உதடுகள் குளிரில் விறைத்து படபடத்துகொண்டிருந்தது. அவளின் மெல்லிய உடை மழையில் தொப்பமாக நனைந்திருந்ததால் அவள் அழகு இளமையெல்லாம் இலைமறை காயாக தெரிந்துகொண்டிருந்தது. என் விழிகள் மெய்மறந்து அவளை ஆராய்ந்து கொண்டிருந்தன..


சட்டென திரும்பியவள் தன்னை விழுங்கி விடுவதுபோல் பார்த்துகொண்டிருக்கும் என்னைப்பார்த்ததும், நாணங்கள் அந்த சோகங்களை எல்லாம் மறைக்க வெக்கத்துடன் தடுமாறினாள்.


நான் குற்ற உணர்சியுடன் திரும்பிக்கொண்டேன். அவள் கண்கள் என் முதுகை துளைப்பது போல் இருந்தது. அவளின் சூடான மூச்சுக்காற்று என் முதுகில் மோதிக்கொண்டிருந்தது.  என் இதயம் வேகமாக துடிக்க,  முள் மேல் நிற்பதுபோல் அவஸ்தையில் நின்று கொண்டிருந்தேன்.. மழை வேறு வேகம் பிடிக்க தொடங்கியிருந்தது.


இது கனவா..?!!!!  திடிரென ரோஜா இதழ்களை என் முதுகில் கொட்டியதுபோல் ஓர்  உணர்வு.. பேச திணறி அற்று இன்பத்தில் திளைத்து நான் சிலையாக நின்றேன்.  பின்னால் நின்று என்னை இறுக்கமாக கட்டியபடி அவள். அவள் அழகையெல்லாம் மேலும் மேலும் என் மேல் இறுக்கி கொண்டிருந்தாள். உலகத்தில் உள்ள அத்தனை சுகங்களையும் என் மேல் போர்த்து விட்டதுபோல் ஓர் உணர்வு.


அவள் முகம் புதைத்திருந்த என் கழுத்து பகுதி அவள் கண்ணீரால் நனைந்து பிசுபிசுக்க தொடங்கியது.. சட்டென அவள் அணைப்பில் இருந்து விலகி திரும்பினேன்.. திரும்பிய என்னை கலங்கிய கண்களோடு பார்த்தவள் மீண்டும் என்னை இறுக கட்டிப்பிடித்துகொண்டாள். அவள் முகம் என் மார்பில் புதைந்து கிடந்தது. அவளின்  ராட்ஷஸ அணைப்பில் நான் உணர்சிகளின் விளிம்பில். கடவுளே இந்த நிமிடங்கள் இப்படியே உறைந்துவிடக்கூடாதா..?
தொடரும்...


குறிப்பு
: இத்தொடர் யுத்தம் நடந்த காலப்பகுதியிலேயே நடப்பதாக எழுதப்பட்டுள்ளது.
: இத்தொடரில் வரும் கதாபாத்திரங்களும் கதையும் நிஜம் அல்ல. (அவ்வ)



................................................................................
மகேந்திரன் சொன்னது…
துஷி கதை அருமையா இருந்துச்சு,
கதைநாயகியின் மனமும் கதைநாயகனின்
மனமும் உங்களுக்காக கவிதையாக..

கண்களிலே கண்ணீர் ஏனடி..
காத்திருக்கேன் நானடி!
காலமிங்கே பதில் சொல்லும்
காதலை நீ ஏத்துக்கோ
கலங்காது பார்த்துக்கிறேன்!!
காமத்தில் விளையவில்லை
கடும் மோகத்தில் விளையவில்லை
உன் முக பாவத்தில் விளைந்ததடி
உன்னோடு நானிருப்பேன் என்கிறேன்
நீயோ என்னை விட்டு போவாய் என்கிறாய்..
உன்னைவிட்டுப் போனாலும்
உன் நெஞ்சை விட்டுப் போவதில்லை ..
பதில் சொல்லடி கண்மணியே!!


(நன்றி: மகேந்திரன்)




ஞாயிறு, டிசம்பர் 18, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 06


சுலக்க்ஷிகா உன் கூட நான் கொஞ்சம் பேசணும்.. நேற்று நடந்ததை பார்த்துதில் இருந்து என் மனசு எவ்ளோ வேதனை பட்டோண்டு இருக்கு தெரியுமா உனக்கு?  நான் தடுமாறி சொல்ல, அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. இன்னும் அந்த தூர திசையை வெறித்து பார்த்துகொண்டிருந்தாள். சுலக்க்ஷிகா இதெல்லாம் உனக்கு கஸ்ரமா இல்லையா..? ஆச்சரியமாய் அவளைப்பார்த்தேன்.. மெதுவாக திரும்பி என்னை ஆழமாய் பார்த்தவள். இருக்கு.. ஆனால் அதுவே பழகிடுச்சு, உதட்டை கடித்து அவள் அழுகையை அடக்க முயற்சிப்பது தெளிவாய் தெரிந்தது. ஆனால் இத்தோடு இப்பேச்சை விட்டுவிடும் நிலையில் நானும் இல்லை... அவளோடு நிறைய பேசணும் என்று மனசு சொல்லிக்கொண்டிருந்தது. சரி... ஆனா நீ நினைத்தால் இதை மாற்றலாம் இல்லையா? நான் இயலாமையுடன் கேட்க அவள் விழிகளில் நிறைந்து நின்ற நீர் கன்னங்களில் உருண்டோட தொடங்கியது. இல்ல ஆர்ணி.. என்னால முடியாது இதுதான் எனக்கு தந்த வாழ்க்கை.. விட்டுடேன்... இதுக்கு மேலே இது பற்றி பேசாத.. அவள் குரல் உடைந்திருந்தது. சரி.. இதோட இந்த பேச்சை விட்டுடலாம், ஆனா ஒன்று நீ உன் வாழ்க்கையையாவது நல்லா அமைக்கலாம் இல்ல? ஆர்ணி.. என்னை ஒரு சுயநலக்காரியா இருக்க சொல்லுறாயா!! நான் ஒன்றும் அப்படிப்பட்டவள் இல்லை கண்களில் திரளும் கண்ணீரை துடைத்தபடி  தீர்க்கமாக சொன்னாள்.

சுலக்க்ஷிகா நீ நினைக்கிறது தப்பு.. நீ நல்லா இருந்தா உன் குடும்பத்தையும் உன்னால் நல்லா வைத்திருக்க முடியும், குறிப்பாய் உன் தம்பியை. நான் சொல்ல என்னை ஊருடுவி பார்த்தவள் வேறு பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டாள். நான் சொன்னதுக்கு இன்னும் நீ பதிலே சொல்லவில்லை..?! என் பேச்சை காதில் வாங்காதவள் போல் இருந்தாள். நானும் அமைதியாக அவளையே பார்த்தபடி இருந்தேன். சூரியன் மெது மெதுவாக மறைந்துகொண்டிருந்தான் வானம் சிவத்து கருக்க தொடங்கியது. மழைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கின. அவளே பேசட்டும் என்று அமைதியாக இருந்தேன். இன்னும் சில நிமிடங்கள் கரைய, தூர நிலைகுத்திய தன் பார்வையை விலக்கியவள். என்னை ஆழமாக பார்த்துவிட்டு, அது பற்றி யோசிக்கல்ல... யோசிக்கவும் விரும்பல்ல.. மரம் நட்டவன் தண்ணி ஊற்றாமலா போக போறான்..!! உன் அக்கறைக்கு நன்றி அலட்சியமாய் சொல்லிவிட்டு எழுந்தவளை மறித்தேன். சுலக்க்ஷிகா நில்லு... உன்னோட இன்னும் நான் பேசணும்..கொஞ்சம் காட்டமாகவே சொன்னேன். நின்று என் கண்களை உற்று நோக்கியவள் என்ன பேசணும்!! சீக்கிரம் சொல்லு நான் போகணும் வெடுக்கென சொன்னாள். சுலக்க்ஷிகா அது வந்து..து. நான் சொல்லுறேன்... ஆனா நீ தப்பா நினைக்க கூடாது.. நான் தடுமாற, சிறு அலட்சிய சிரிப்புடன் என்னை பார்த்தாள் அவள் விழிகளின் வீச்சை தாங்க முடியாமல் என் விழிகள் தடுமாற சட்டென திரும்பி வேறெங்கோ பார்த்தவள், மீண்டும் திரும்பி.. இல்ல ஆர்ணி.. வேணாம்.. நீ சொல்ல நினைக்கிறத நீயே வைச்சுக்கோ.. அதை சொல்லி என்னை தர்மசங்கடத்தில் விட்டுறாதே...சொல்லிவிட்டு போக முயற்சித்தவளை வேகமாக இடைமறித்தேன்.

இல்ல.. நீ ஏதோ தப்பா புரிஞ்சு கிட்ட.. நான் என்ன சொல்ல வந்தேன் என்றா... நான் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்தாள். தெரியும்... நீ என்ன சொல்ல போறாய் என்று நல்லாவே தெரியும். வழமைக்கு மாறான உன் தடுமாற்றமும் கண்களும் எல்லாமே சொல்லுதே... இதை புரிஞ்சு கொள்ள முடியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் கிடையாது. ஆவேசமாக சொன்னவள் "நீ என்னை காதலிக்கிற.." அவ்வளவு தான?? கண்களில் தீப்பொறி பறக்க கேட்டாள். நான் ரெம்பவே தடுமாறிப்போனேன். சுலக்க்ஷிகா இதெ..ப்படி உனக்கு..?? அதானே உன் கண்களே சொல்லுதே.. அதைவிட உன்ன மாதிரி பணக்கார வயசு பசங்களுக்கு இதுதானே பொழுது போக்கு..!! வேணாம் சுலக்க்ஷிகா தப்பா பேசாத..? எல்லா பசங்கள் மாதிரியும் என்னை நினைக்காத... உங்க நாட்டிலே ஒரு ஆணும் பொண்ணும் பேசுறதே தப்பா இருக்கலாம். நான் வளர்ந்த நாட்டில் அப்படியெல்லாம் இல்லை. அங்கே தப்பு பண்ணுவதற்கு ஆயிரம் கதவுகள் திறந்தே இருக்கும். எல்லோருக்கும் சுய கட்டுப்பாடும் ஒழுக்கமும் வேணும் என்று நினைக்கிறவன் நான். சுலக்க்ஷிகா.. நான் யார் கூடையும் இந்தளவுக்கு பேசினது இல்லை தெரியுமா? ஆனா... உன்ன முதல் முதல் பார்த்த அந்த நிமிஷத்தில் இருந்து உன்னோட பேசணும் பழகணும் என்று துடிச்சுட்டு இருக்கேன் தெரியுமா..? உன் கஸ்ரங்களில் நானும் பங்கெடுக்கணும் என்று நினைக்கிறேன் ஆசைப்படுறேன். இதை என்னால் எங்கையோ ஒரு தூரத்தில் நின்று செய்யமுடியாது அதான் உன் கூட வரணும் வாழனும் என்று நினைக்கிறேன். இந்த முடிவை உன் மேல் இரக்கப்பட்டு எடுத்தது என்று மட்டும் நினைச்சுடாதே.. உன்னை நான் எவ்ளோ நேசிக்கிறேன் என்று என் மனசுக்கு மட்டும்தான் தெரியும். என் விருப்பத்தை நீ நிராகரித்தால்  கூட என் வாழ்க்கையில் எப்போதும்  உனக்கு மட்டும்தான் இடம். நீ வராட்டி கூட அந்த இடம் உனக்காக எப்பவும் வெற்றிடமாகத்தான் இருக்கும். நான் உடைந்து போய் தழு தழுத்த குரலில் சொல்ல அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக தொடங்கியது. 

ம்ம்.. நீ என்னை ரெம்ப நேசிக்கிற... சரி இருக்கட்டும். இந்த காதல் எதுவரைக்கும்...!! நீ பிரான்ஸ் போகும் வரைக்குமா?? அலட்சியமாக கேட்டவள், ஆர்ணி..  நீ வைரம்தான் ஒத்துக்கிறேன் ஆனா நான் மண்குதிரை. உன்னோடு ஆற்றில் இறங்கினா நாளைக்கு கரைந்து காணாமல் போகபோவது நான்தான் சொல்லிவிட்டு  கண்களில் பெருகும்  கண்ணீரை துடைத்தபடி ஏக்கத்துடன் என்னைப்பார்த்தாள்.

தொடரும்..
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா 

வியாழன், டிசம்பர் 15, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 05

ன்று காலை வழமைபோல் பற்களை தீட்டுவதை போல் பாவனை செய்தபடி சுலக்ஷிகாவை கண்களால் தேடிக்கொண்டிருந்தேன். திடீரென அவள் வீடு பரபரப்பானது, சுலக்ஷிகாவின் அம்மா வழமைக்கு மாறாக அடித்தொண்டையில் கத்தி பேசுவதும் பின் அழுவதுமாக இருக்க, அவளுடைய அப்பாவின் கர்ஜனை காதை பிளந்தது. பல தலைகள் அயல்வீட்டு முற்றங்களில் தோன்றி வேடிக்கை பார்க்க தொடங்கின. அப்பா அம்மாவுடன் அப்பம்மாவும் பதறியபடி என்னருகே வந்துவிட்டார்கள். நான் பயத்துடன் பார்த்துகொண்டு இருக்கும் போதே.. சுலக்ஷிகாவின் அம்மாவை அவள் அப்பா தலைமயிரில் பிடித்து வெளியே இழுத்துவந்து அடுத்த கட்டமாக கன்னத்தில் பளார்..பளார்.. என அறைய தொடங்கினார். பதிலுக்கு சுலக்ஷிகாவின் அம்மாவும் அவர் சட்டையை பிடித்து உலுக்கியபடி, கொல்லுய்யா... கொல்லு.. இப்படி தினம் தினம் சித்திரவதை பட்டு சாகிறதைவிட ஒரேயடியா செத்துடுறேன்...அவள் அடித்தொண்டையில் கதற அவர் மேலும் மேலும் உக்கிரமாக தாக்கதொடங்கினார்.

அதுவரை திக்குபிரமை பிடித்து நின்ற சுலக்ஷிகா ஆவேஷமாக கத்தியபடி இடையில் நுழைய அவர் மனைவியை நோக்கி அடித்த அடிகள் சுலக்ஷிகாவை பதம் பார்த்தது. அவள் அதை சர்வ சாதாரணமாய் தாங்கியபடியே தகப்பனை தள்ளி தாயை காப்பாற்றுவதிலேயே குறியாய் இருந்தாள். அவள் தம்பி சுவற்றுடன் அட்டைபோல் ஒட்டியபடியே வெம்பி வெம்பி அழுதுகொண்டிருந்தான். அவள் அப்பா திடீரென அடிப்பதை நிறுத்தி சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்களை முறைப்பாக பார்த்தவர் சட்டென வீட்டைவிட்டு வெளியேறி வீதியில் வேகமாக நடக்கதொடங்கினார். ஈவு இரக்கம் கொஞ்சமும் இன்றி தன் மனைவியையும் மகளையும் அடித்துவிட்டு போகும் அந்தாளை விட எந்த சலனமும் இன்றி சுற்றி வேடிக்கை பார்த்தவர்கள் மீதே கோபம் அதிகம் வந்தது எனக்கு. என் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த அப்பம்மா மெதுவாக என் கைகளை வருட சட்டென தட்டி விட்டேன். 

சே.. ஏன் இப்படி இருக்காங்க.. இப்படி ஒரு அநியாயம் நடக்குதே தட்டிக்கேப்போம் என்ற மனிதாபிமானமே இல்லாமா இப்படி நான்சென்ஸ் மாதிரி வேடிக்கை பார்க்கிறாங்களே என்ன மனுஷங்க இவங்க எல்லாம்?! நான் பொரும, அப்பம்மா மீண்டும் என் கைகளை பிடித்து தலையை கோதிய படி, ஆர்ணிகன் குட்டி.. உனக்கு இதெல்லாம் புதுசு அதான் தாங்கிக்க முடியாம இருக்குப்பா எங்களுக்கு எல்லாம் பழகிச்சுடா கண்ணா. அந்த வீட்டு சண்டையை மட்டும் யாரும் விலக்க போக மாட்டாங்கடா ஏக்கனவே பலமுறை அங்கே போய் அவமானப்பட்டு வந்தவங்கதான் எல்லோருமே. ஏன் நான் கூட பலமுறை போய் அவமானப்பட்டு இருக்கேன், பரிதாபப்பட்டு போனதுக்கு செருப்பால அடிக்காத குறையா வயசு போனவளே என்ற சின்ன உறுத்தல் கூட இல்லாம கழுத்தைபுடிச்சு வெளிலே தள்ளிட்டான். அது கூட பரவாயில்லை ஆனா அவன் பொண்டாட்டி ஒரு படி மேலேயே போய், இது எங்க குடும்ப பிரச்சனை எங்க பிரச்சனைக்க அடுத்தவங்க நீங்க தலையிடுறது நாகரீகம் அற்றது தயவு செய்து வெளில போங்கம்மா.. என்று கையெடுத்து கும்புடுறா..!! இதுக்கு பிறகும் அந்த வீட்டுக்க எவனும் காலெடுத்து வைப்பானா சொல்லு.. 

ஆர்ணிகன் இதை எல்லாம் மனசுக்க வைச்சுக்காதையப்பா.. அந்த குடும்பம் ஒரு மாதிரித்தான். ஊர்காரங்க எங்களுக்கே அதுவள புரிஞ்சுக்க முடியல்ல, வீட்டுக்க தலைவன் ஒழுங்கா இருந்தாத்தானே மிச்சமும் ஒழுங்கா இருக்கு. அவனே படு அயோக்கியன் அப்புறம் மிச்சம் எப்படி இருக்கும்?? நான் கூட ஒருதடவை பழசை எல்லாம் மறந்துதுட்டு சோற்றுக்கே கஸ்ரப்படுதுவளே வயசுக்கு வந்த பொண்ணு வேற இருக்கு எண்டுட்டு எங்க காணிலையே அவனுக்கு வேலை போட்டு கொடுத்தேன். கொடுத்து என்ன பிரயோசனம் ரெண்டுநாள் ஒழுங்கா வந்தான் அப்புறம் கூட வேலைசெய்யிறவனோட ஏதோ தகராறாம். நான் கூப்பட்டு விசாரிச்சதுக்கு பணக்காரங்களிட்ட எல்லாம் என்னால கைகட்டி வேலை பார்க்கமுடியாது அதுக்கு வேற யாரையும் பாருங்க என்று சொல்லீட்டு அவன் பாட்டுக்கு போயிட்டே இருக்கான். அதுகளிட்ட எது இருக்கோ இல்லையோ ரோஷத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ம்..... ஆர்ணிகன் குட்டி அதுகள் அப்படித்தாண்டா.. ஆனா ஒண்டுடா அந்த பொண்ணு இருக்காளே சுலக்ஷிகா.. தங்கமான பொண்ணு. அவள் ரெம்ப பாவம்டா... இந்த சின்னவயசிலேயே எவ்ளோ அவமாங்கள் வேதனைகள் அவளுக்கு! அப்பம்மா பெருமூச்சு விட்டு அங்கலாய்க்க நான் அவளை நினைத்து உள்ளுக்குள்ளே உடைந்து நொருங்கிக்கொண்டிருந்தேன்.

இரவு நெடுநேரமாகியும் தூக்கம்வராமல் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தேன். துக்கத்திற்கு பதில் காலையில் நடந்த சம்பவங்களே கண்முன் வந்து மனசை ரணமாக்கிக்கொண்டிருந்தது. பாவம் சுலக்ஷிகா.. இறைவன் அவளுக்கு அழகு அறிவு எல்லாத்தையும் அள்ளிக்கொடுத்து விட்டு அவள் வாழ்க்கையை மட்டும் ஏன் இவ்ளோ ரணமாக அமைத்தான். சுலக்ஷிகா மாதிரி ஒரு பெண் இப்படி இருப்பது எவ்ளோ வேதனையானது. சுலக்ஷிகா நல்லா இருக்கோணும்.. அவள் வாழ்க்கை நன்றாக அமையனும்.. அதற்க்கு என்னால் ஆனா உதவியை செய்யணும். இல்லை இல்லை... அவளுக்காக அடுத்தவர்களிடம் போய் உதவி கேட்பதை விட நானே செய்யலாமே!!! என் மனசுக்குள் ஒரு மகா யுத்தமே நடந்துகொண்டிருந்தது. மனசுபோட்டு அடித்து இறுதியில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தது. இந்த முடிவு வெளித்தோற்றத்துக்கு  அவள் மேல் கொண்ட பரிதாபமே காரணமாக எல்லோருக்கும் பட்டாலும் என் மனச்சாட்சிக்கு தெரியும் உண்மை நிலை. முதல் பார்வையிலேயே அவள் எனக்குள் வந்துவிட்டாள். அவள் மேல் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பே அவள் பின்னால் என்னை சுற்ற வைத்தது. அதுவே இன்று இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு என்னை கொண்டுவந்துள்ளது. எல்லாம் சரி, இந்த முடிவை சுலக்ஷிகா ஏற்பாளா? ஒருவேளை இதை அவள் ஏற்க்காவிட்டால்..!! இல்லையில்லை இதை அவள் ஏற்கா விட்டாலும் அவள் ஏற்கும்படியான ஒரு சுழலை நான் உருவாக்கவேண்டும் மனசு உறுதியாக சொன்னது. எதையோ பெரிய சுமையை இறக்கியது போல் மனசு லேசாக இருந்தது. வழமைக்கு மாறாக மனசு சந்தோஷத்தில் குதுகழிக்க மனநிறைவோடு தூங்க தொடங்கினேன்.


வழமையாக அவளை சந்திக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. வீட்டினுள் இருந்து அவளை பார்க்க போக  எத்தனித்த போது ஏதோ என்னை உந்த மீண்டும் கண்ணாடி முன் வந்து நின்று என்னைப்பார்த்தேன்.. இப்போது வர்ணிக்க நேரம் பற்றாது ஆனாலும் நீ ரெம்ப அழகுடா மனச்சாட்சி குறும்பு சிரிப்புடன் சொல்ல வெக்கம் என்னை பிடுங்கி தின்றது. மனசுக்குள் கற்பனைகள் புடை சூழ ஆற்றங்கரையை நோக்கி நடக்க தொடங்கினேன். தொலைவில் வரும்போதே  அந்த பாழடைந்த பங்களாவின் மேல் படரும் கொடிமீது சாய்ந்தபடி தூரத்தில் எதையோ வெறித்து பார்த்தபடி அவள் நிற்பது தெளிவாக தெரிந்தது. வழமைக்கு மாறாக இன்று அவள் அதிகமாகவே அழகாய் இருப்பதுபோல் இருந்தது. மனசுக்குள் சந்தோஷமும் பயமும் தடம்புரள அவளை நெருங்கினேன். என் காலடி சத்தம் கேட்டு சுயநினைவு பெற்றவள் சட்டென புன்னகைதவள் பின் பார்வையை என்னில் இருந்து எடுத்து மீண்டும் அந்த தூர திசையில் செலுத்த தொடங்கினாள். நான் தயங்கி தயங்கி சுலக்ஷிகா... என்றேன். என்ன என்பதுபோல் திரும்பி நிமிர்ந்து என்னை பார்த்தாள்.
தொடரும்..


வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா 

குறிப்பு
: இத்தொடர் யுத்தம் நடந்த காலபகுதியில் நடப்பதாகவே எழுதப்பட்டுள்ளது.
: இத்தொடர் ஒரு சிறு குறுந்தொடர்.. சில பகுதிகளுடன் முடிவடையும்.

: இத்தொடரில் வரும் காதாபாதிரங்களோ கதையோ உண்மையல்ல முழுக்க முழுக்க கற்பனையே.. 


செவ்வாய், டிசம்பர் 13, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 04



ன்று எப்படியாவது அவளைப்பற்றி தெரிந்து கொள்ளனும் என்று நான் தவித்துகொண்டிருந்தேன். அவள் கால்கள் பின்னி பிணைய மெதுவாக என்னைக்கடந்து பார்க்காதவள் போல் செல்ல தொடங்கினாள். 


உங்களுக்காத்தான் இவ்ளோ நேரமாய் காத்திருக்கேன்.. இப்போ நீங்க பேசமா போனா என்ன அர்த்தம்! அவளுடன் நடந்தபடியே கொஞ்சம் தைரியத்தை வரவழைத்தபடி கேட்டேன். நின்று திரும்பியவள் விழி இமைகள் படபடக்க என்னைப்பார்த்தாள். அந்த பெரிய விழிகளின் வீச்சை தாங்கமுடியாமல் என் கண்கள் தரை தாழ்ந்தது. எ...ன்ன பேசணும் ? தடுமாறியபடி கேட்டாள். உங்க பேர்..? சற்று யோசித்தவள் "சுலக்ஷிகா" என்று மெதுவாக உச்சரித்துவிட்டு வேகமாக நடக்க முயர்சித்தாள் , நில்லுங்களேன் ப்ளீஸ்..  ஏங்க பயப்படுறீங்க?  ச்சும்மா ரெண்டு வார்த்தை பேசுறதில் என்ன இருக்கு.. அதுக்கு போய் இப்படியா..! ஓடுறது. நீங்க நேற்று ஓடின ஓட்டத்தில் இப்பவும் எனக்கு மூச்சு வாங்குது தெரியுமா!! நான் சிரிக்காமல் சொல்ல, அவள் இதழ் மெல்ல விரிந்தது. அப்பாடா.... இப்பயாச்சும்  சிரிச்சீங்களே! நான் நினைச்சேன் உங்களுக்கு சிரிக்கவே தெரியாதாக்கும் என்று நான் பெருமூச்சு விட, மீண்டும் இதழ்விரித்து சிரித்தவள் நான் போகணும்..  என்று நகர்ந்தாள், முன்னாள் போய் மறித்து நின்றேன்.


என்னைப்பற்றி எதுவுமே கேக்க மாட்டீங்களா?? நான் அப்பாவியாய் முகத்தை வைத்துகொண்டு கேட்க, குறும்பு கொப்பளிக்க என்னைப்பார்த்தவள், தெரியுமே... ஒற்றைவரியில் சொல்லிவிட்டு நகர்ந்தவளை ஆச்சரியமாய் பார்த்தபடி பின் தொடர்ந்தேன். தெரியுமா! எப்படி..?!!  ம்.... உங்க பேர் ஆர்ணிகன் தானே? ஆமா... இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும் நான் முகத்தில் ஆச்சரியம் காட்ட, திரும்பி ஒரு ஏளன பார்வை பார்த்தவள். நீங்க வாறத்துக்கு முதலே உங்கள பத்தியும் உங்க அப்பா அம்மா பற்றியும் காமாட்சி அப்பம்மா நிறைய சொல்லி கேட்டு இருக்கேன் என்று சர்வசாதாரணமாய் சொன்னவளின் குரலில் மாற்றம்...! காமாட்சி அப்பம்மா ரெம்ப பாவம், தனியே இருந்து ரெம்ப கஸ்ரப்படுறாங்க என்று சுலக்ஷிகா அப்பம்மா மேல் காட்டிய பரிவு ஆச்சரியமாயும் அவள் மேல் ஒரு வித மரியாதையையும் உண்டு பண்ணியது.

அதன் பின் அவளை அடிக்கடி சந்திக்க தொடங்கினேன். முதலில் தயங்கி தயங்கி பேசியவள் போக போக இயல்பாக பேச தொடங்கினாள். முன்னைய சந்திப்புகளில் அவள் தன்னை பயந்தவள் போல் காட்டிக்கொண்டது உண்மையில்லை என்பதை அவளுடனான அடுத்தடுத்த சந்திப்புகளிலேயே தெரிந்துகொண்டேன். எங்களுடைய எல்லா சந்திப்புகளிலும் அவளே அதிகம் பேசுவாள். அவளுடைய பேச்சுக்கள் எல்லாம் வெறும் உலர்ந்த சொற்களாலேயே உருவாக்கப்பட்டு இருக்கும். எல்லாத்தையும் தெரிந்தவள் அறிந்தவள் அனுபவித்தவள் போல் அலட்டலான அவள் பேச்சில் ஒளிந்திருந்து அடிக்கடி வெளிப்படும் விரக்தி அவள் வாழ்க்கையில் நிறைய அடிபட்டதை காட்டிக்கொடுத்தது. அவளுடைய எதார்த்தமான பேச்சு துணிச்சலான பதில்கள் எதையுமே கடந்துபோகும் அவள் மனநிலை என்று எனக்கு அவள் ஒரு ஆச்சரிய குறியாகவே தென்பட்டாள். இதனால் என் மனமும் அவளை அதிகமாகவே நெருங்க தொடங்கிவிட்டது .

எங்கள் வீட்டின் பின்னால் உள்ள வேப்பமரத்தடியில் நின்று பார்த்தால் அவள் வீடு தெரியும். அவளை சந்திக்க முடியாத நாட்களில் பெரும்பாலும் நான் இந்த வேப்பமரத்தடியில் நின்றுதான் அவள் வீட்டையே பார்த்தபடி நிற்பேன். அப்பம்மாவின் பிரமாண்ட வீட்டுக்கு அப்படியே எதிரானது அவள் வீடு. சிறிய கூரை வீட்டில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் மண் சுவர்கள், அதற்கு தகரத்தால் பொருத்தப்பட்ட கதவு என சுலக்ஷிகாவின் வீடு ஒரு ஏழ்மையின் சின்னம். எனக்கு சுலக்ஷிகா வீட்டில் அவளைத்தவிர மற்றவர்கள் அறிமுகம் இல்லை என்றாலும் தூர நின்று பார்த்திருக்கிறேன். 


அவள் வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் சந்தோஷமாய் பேசி நான் பார்த்தது இல்லை. அவள் அப்பா அதிகாலைகளில் அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறுவதை பார்த்திருக்கேன் பின் இருட்டிய பின் கையில் ஏதாவது ஒரு பையுடன் வீட்டுக்குள் நுழைவதையும் பார்த்திருக்கேன். இது பற்றி அப்பம்மா வீட்டில் வேலை செய்பவர்கள் அடிக்கடி பேசிக்கொள்வார்கள், அவருக்கு கடன் கொடுத்தவர்கள் தொல்லையாம் அதான் அவர்களுக்கு பயந்து பகலில் வீட்டில் இருப்பது இல்லையாம். சுலக்ஷிகா வீட்டில் பெரும்பாலும் இரவில்தான் அடுப்பு எரியும், அதுவும் அவள் அப்பா எதையாவது வேண்டிக்கொண்டு போனால்தான். 

சுலக்ஷிகாவுக்கு ஒரு தம்பி மட்டுமே..  நான் பாக்கும் போதெல்லாம் இடுப்பில் மட்டும் கிழிந்த ஒரு காற்சட்டையுடன் முற்றத்து மணலில் விளையாடிக்கொண்டிருப்பான். அவன் வேற்றுடம்பு வெய்யில் பட்டு பட்டு கருத்து இருக்கும். அந்த வீட்டின் வறுமை அவனிலேயே அதிகம் தெரியும். அவன் அடிக்கடி வீட்டுனுள் சென்று தாயிடம் எதையோ கேட்டு அழுவது கேட்கும் பின் சற்று நேரத்தில் எதுவும் நடக்காதது போல் கண்களை துடைத்தபடி வெளியே வந்து மீண்டும் விளையாட தொடங்கிவிடுவான். சுலக்ஷிகாவின் அம்மாவை நான் இதுவரை பார்த்ததே இல்லை. முற்றத்து மணலில் விளையாடும் மகனை கூப்பிடும்  போது அவள் குரலைக்கேட்டு இருக்கேன். அவள் குரல் ஜீவன் அற்று பரிதாபமாய் இருக்கும், அதனாலேயே என்னவோ சுலக்ஷிகாவின் அம்மாவை பார்க்க வேண்டும் என்ற உந்தல் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால் அந்த சந்தர்பத்தை இறைவன் அவ்ளோ கொடூரமாக அமைப்பான் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

தொடரும்...


குறிப்பு:
இத்தொடர் யுத்தம் நடந்த காலபகுதியில் நடப்பதாகவே எழுதப்பட்டுள்ளது.
இத்தொடர் ஒரு சிறு குறுந்தொடர்.. சில பகுதிகளுடன் முடிவடையும்.
இத்தொடரில் வரும் காதாபாதிரங்களோ கதையோ உண்மையல்ல முழுக்க முழுக்க கற்பனையே.. (அவ்வ..
இத்தொடரின் நாயகிக்கு "சுலக்ஷிகா" என்று பெயர் சூட்டிய கலியுக காதல்மன்னன் "நாற்று" நிருபனுக்கு நன்றி.lol

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 03


ன்றிரவு நான் தூங்க பின்னிரவு தாண்டிவிட்டது. இருட்டில் மழை இரவில் மின்னல் வெளிச்சத்தில் திடிரென தோன்றி மறையும் அழகிய பூப்போல் அவள் முகம் என் மனதினில் பதிந்துவிட்டது. அந்த சில வினாடிகள் அவள் என்னை பார்த்த போது மிரட்சியையும் தாண்டி அவள் முகத்தில் அப்பியிருந்த அந்த மென் சோகம் என் மனசை பிசைந்து கொண்டேயிருந்தது.

இரவு நெடுநேரம் கண்விழித்ததால் காலையில் தூக்கம் கலைந்த பின்னும் கண் விழிக்க மனமின்றி படுக்கையில் கிடந்தேன். நெடுநேரமாகியும் திறக்கபடாததால் என் அறைக்கதவு தட்டப்பட அவசரமாக எழுந்து போய் கதவை திறந்தேன். வெளிய பாலுடன் அப்பம்மா.  அவளைப்பற்றி அப்பம்மாவிடம் விசாரிக்க நா துடித்தது. ஏதோ ஒரு முன்னெச்சரிக்கை தடுக்க அடக்கிகொண்டேன். ஆனாலும் அவளைத்தான் மறக்க முடியவில்லை. எதைப்பார்த்தாலும் அவள் முகம்தான் நிழலாடியது. அவளை மீண்டும் பார்க்க மாட்டோமோ! பேசமாட்டோமா! என்று மனசு கிடந்தது அடித்துக்கொண்டது. முன்பின் தெரியாத ஒருத்திக்காக என் மனம் ஏன் இப்படி தவிக்கிறது ஏங்கிறது..! என்னையே நான் கேட்டுக்கொண்டேன் பதில்தான் கிடைக்கவில்லை. சில வினாடிகள் நடந்த அந்த பார்வை பரிமாற்றங்களிலேயே எப்படி அவளால் என்னை பாதிக்க முடிந்தது நினைக்க நினைக்க ஆச்சரியமாய் இருந்தது. எப்போ பார்த்தாலும் வீட்டுக்குளேயே அடைபட்டபடி எதையாவது யோசிச்சபடியே திரியிறியே.. என்னாச்சுடா ஆர்ணிகன் குட்டி! வெளிலே ..ச்சும்மா காலாற நடந்திட்டு வரலாமில்ல? வேணும் எண்டா நானும் கூட வரவா... அப்பம்மா கொஞ்ச, நான் நெளிந்த படி.. இல்ல அப்பம்மா நான் தனியவே போயிட்டு வாறேனே.  ..ம் சரியா போச்சு இப்பவும் தனியா தானா? சரி அப்படி என்னதாண்டா யோசிப்ப! அப்பம்மா ஆச்சரியமாய் கேட்க சிரித்து மழுப்பியபடி நகர்ந்தேன்.

எவ்ளோ... அழகா இருக்கு! இவ்ளோ நாளா இங்கே வராம விட்டுடியே ஆர்ணிகன். உனக்கு இந்த அழகை எல்லாம் முதலே ரசிக்க கொடுத்து வைக்கவில்லைப்போல் மனசு ஆச்சரியப்பட்டு கோபப்பட்டு சலித்துக்கொண்டது. ஓங்கி வளர்ந்திருக்கும் பெரிய மரங்கள், பச்சைப்பசளேன அழகான புல்வெளி. அருகில் வளைந்து நெளிந்து ஓடும் ஆறு, சற்று தள்ளி யுத்தத்தால் சிதைந்து போய் இருக்கும் பழைய பிரமாண்டமான கட்டிடம் ஒன்று, அதில் படரும் கொடி. ஒவ்வொன்றையும் ரசித்தபடி நான் ஆற்றங்கரையை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். புல் மேய்ந்தபடி நின்ற ஆடுகள் தலையை தூக்கி என்னைப்பார்த்துவிட்டு மறுபடியும் மேய தொடங்கின. வேகமாக பாய்ந்தோடும் ஆற்று நீர் இடையிடையே பள்ளத்தில் விழுந்து எழும்புவதால் உண்டாகும் வெள்ளை வேளேரென்ற நுரைகள் அவ்ளோ அழகா இருந்தது. நான் மேடான கரைப்புல்லில் அமர்ந்தபடி கால்கள் இரண்டையும் ஓடும் நீருக்குள் விட்டபடி தெறிக்கும் மீன்களின் அழகையே கண்வெட்ட மறந்து ரசித்துகொண்டிருந்தேன்.

மிக அருகில் ..க்ளுக் ..க்ளுக் என குடத்துக்குள் யாரோ தண்ணீர் நிரப்பும் சத்தம், சட்டென திரும்பினேன் அருகில் அவள். நேற்றைய மழை இரவில் மனதை நனைத்துவிட்டு மாயமான தேவதை. அவளை பார்த்தபடி வார்த்தைகள் வராமல் நான் திணற, திரும்பியவள் விழிகளும் ஆச்சரியமாய் என்னை நோக்க அங்கே நான்கு விழிகளும் ஒன்றுடன் ஒன்று கவ்வி பின்னிக்கொண்டன. சில விநாடிகள்தான் ஆனால் சில யுகம் போல் கழிய யார்தான் முதலில் பார்வைகளை விலக்குவது என்ற போராட்டத்தில் அவளே ஜெயித்தாள். சட்டென சுதாரித்தவள்  பாதி நிறைந்த குடத்தை தூக்கியபடி மிக வேகமாக நடக்கதொடங்கினாள். ஒரு வினாடி செய்வதறியாது திணறிய நான் சுதாரித்தபடி வேகமாக அவளை பின்தொடர்ந்தேன். ப்ளீஸ்.. கொஞ்சம் நில்லுங்க.. உங்க கூட சில வார்த்தைகளாவது பேசணும்.. நான் தடுமாறி சொல்ல அவள் எதையும் காதில் வாங்காமல் வேகமாக நடப்பதிலேயே குறியாக இருந்தாள். ஹலோ.. ப்ளீசுங்க..பெயரையாவது சொல்லீட்டு போங்களேன்! நானும் வேகமாக பின் தொடர அவளினது பயமும் வேகமும்தான் அதிகரித்தது. இறுதியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஓடி மறைந்து விட்டாள். எனக்குத்தான் எதையோ தவற விட்டதைப்போல் மனசு கிடந்தது தவித்தது.

அடுத்த நாள். அதே நேரம் அதே இடம் அவள் வருகைக்காக காத்திருந்தேன். அவள் வருவாள் வருவாள் என மனசு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது. கடிகார முற்கள் சோம்பறியாகி மெது மெதுவாய் நடைபோடுவதைப்போலவும் நான் அதை தள்ளினால் என்ன என்ற நிலையில் ஒருவித அவஸ்சையிலேயே நான் தவித்துகொண்டிருந்தேன். நேற்று அவள் ஓடி மறைந்த இடத்தை பார்த்து பார்த்து கண்கள் சோரத்தொடங்கியது. அவள் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்து சோர்ந்து போயிருந்த என் கண்களில் திடீரென ஒரு ஒளிக்கீற்று. ஆம்... தூரத்தில் அவள் குடத்துடன் வருவது தெரிந்தது. நான் விபரிக்க முடியாத சந்தோஷத்தில் திளைக்க தொடங்கினேன். சாம்பல் நிற பூப்போட்ட சட்டையிலும் மெல்லிய கருப்பு நிற பாவாடையிலும் பாதி பின்னி விரிக்கப்பட்ட கூந்தலிலும் அவளை பார்க்கும் போது சிகிரியாவில் பூவோடு நிற்கும் சித்திரம்தான் உயித்தெழுந்து இங்கு குடத்துடன் வருகிறதோ என்ற ஜயம் எழுந்தது. வேகமாக வந்தவளின் நடை என்னைக்கண்டதும் தளர்ந்தது.

தொடரும்...


குறிப்பு:
இத்தொடர் யுத்தம் நடந்த காலபகுதியில் நடப்பதாகவே எழுதப்பட்டுள்ளது.
இத்தொடர் ஒரு சிறு குறுந்தொடர்.. சில பகுதிகளுடன் முடிவடையும்.
இத்தொடரில் வரும் காதாபாதிரங்களோ கதையோ உண்மையல்ல முழுக்க முழுக்க கற்பனையே.. (அவ்வ..
இத்தொடருக்கு அழகான முகப்பு படம் செய்து அனுப்பிய நண்பன் கந்தசாமிக்கு நன்றி.




புதன், டிசம்பர் 07, 2011

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. 02


வளை பார்க்க போவது மனதுக்குள் உற்சாகத்தை கொடுத்தாலும் என்னை பார்த்ததும் அவள் என்ன செய்வாள் என்பது மனதுக்குள் ஒரு அச்சத்தை பரவவிட்டது. எல்லாமே உன்னால்தான் உன்னால்தான் என்று அப்பாவும் அம்மாவும் என் மேல் பழியை சுமத்துகிறார்களே..? உண்மையில் இதற்கு யார் காரணம்.. நானா? இல்லையே.. இவர்கள் தானே காரணம். நான் மாட்டேன் மாட்டேன் என்று சொல்ல வில்லங்கமாக இலங்கை கூட்டி வந்தவர்கள் யார் இவர்கள் தானே? நான் வராமல் இருந்திருந்தால் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மாட்டி தவித்திருக்க மாட்டேனே! எல்லாத்துக்கும் காரணகத்தாவாக அவர்களே  இருந்துவிட்டு இப்போது பழியை என் மேல் மட்டும் போடுவதில் என்ன நியாயம். டேய்.. ஆர்ணிகன் கூட்டி வந்தது அவர்கள்தான் ஆனால் அவளை பார்க்க பழக சொன்னதும் அவர்களா..? என்னைத் தொட்டு சொல்லு மனச்சாட்சி அதட்டியது. பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டேன். நான் வராமலே இருந்திருக்கலாமே என்று நினைக்கும் அந்த முதல் இலங்கை பயணத்தை மனம் அசைபோட தொடங்கியது.

வன்னியில் நெடுங்கேணியில் இருக்கும் ஒரு கிராமந்தான் அப்பாவின் பிறந்த இடம். அங்கு போய் சேர்ந்ததுமே எனக்கு தலையே சுற்றத்தொடங்கி விட்டது. ஏதோ திசை தெரியா காட்டில் அகப்பட்டு கொண்டதுபோல் இருந்தது. அங்கே எனக்கு ஒரே ஆச்சரியம் என் அப்பம்மாதான். காமாட்சி என்றால் அந்த கிராமத்தில் தெரியாவர்களே இல்லை. அங்கிருக்கும் குடிசை வீடுகளுக்கு மத்தியல் கம்பீரமாய் நிற்கும்  அப்பம்மாவின் கல்வீடு மகன் வெளிநாட்டில் இருக்கார் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. வீட்டை பார்க்கும் போது இவ்ளோ பெரிய வீட்டில் அப்பம்மா எப்படித்தான் தனியே இருக்காரோ என்றுதான் தோணும். வீட்டுக்குள் நுழைந்தால் ஒரே ஆச்சரியம்தான். எழுபத்தைந்து வயதிலும் பம்பரமாய் சுழண்டு கொண்டிருப்பார் அப்பம்மா. பெரிய வீட்டில் ஒரு மூலையில் குவிக்கப்பட்ட வெங்காயம். இன்னொரு மூலையில் அடுக்கப்பட்ட நெல்லு மூட்டை கச்சான் மூட்டை. முற்றத்தில் காயும் எள்ளு என, எதிர் எதிரே தென்படும் வேலைக்காரர்களிடம் இதை இப்படி செய் அதை அப்படி செய்திருக்கலாமே என சுழண்டு வேலை வாங்கும் அப்பம்மா என்னிடம் காட்டும் பிரியம்...! இதுவரை நான் அனுபவித்திராதது. 

டேய் ஆர்ணிகன் குட்டி.. உங்க அப்பண்டா இந்த ஆமிக்காரன் தொல்லையால்தான் பிரான்ஸ் போனான். அதுக்கு பிறகு உங்க அப்பப்பா இறந்ததுக்கு கூட வரல்லைடா... என்று முந்தானையால் கண்களை துடைத்தபடி தொடர்வார், ஏதோ விசா பிரச்சனை என்றான் பிறகு அங்கேயே உங்க அம்மாவ கல்யாணம் கட்டி நீயும் பிறந்து பல வருடம் ஓடி போச்சு, ஹும்.. இப்போத்தான் ஏதோ மனசுமாறி என் பேரப்புள்ளை உன்னை என் கண்ணில காட்டியிருக்கான், என்று அப்பம்மா கண்கலங்கி என்னை வாரி அனைத்து உச்சிமுகரும்போது எப்படி.. இப்படி ஒராளை அப்பாவால் மிஸ் பண்ண முடியுது! என்றுதான் தோணும். வீட்டை சுற்றி பெரிய முற்றம். முற்றத்தில் ஓங்கி வளர்ந்திருக்கும் மாமரங்கள். கள்ளம்கபடமற்ற அயலவர்கள் வீட்டைவிட்டு  கொஞ்சம் தள்ளி ஓடும் ஆறு. அதை சுற்றியுள்ள வயல்வெளிகள் அதில் திரியும் மயில்கள் என்று போன சில நாட்களிலேயே அந்த கிராமம் எனக்கு பிடித்துவிட்டது. ஆனாலும் அப்பாவையும் அம்மாவையும் போல் அவர்களுடன் என்னால் முழுதாய் ஒட்ட முடியவில்லை கொஞ்சம் விலகி விலகியே இருந்தேன். புது இடம் புது ஆக்கள் அதுதான் போக போக பழகிடும் என் நிலைக்கு அம்மா காரணம் சொல்ல மற்றவர்கள் அமைதியாகிவிட்டார்கள். ஆனால் என்னைத்தான்  தனிமை போட்டு வாட்டியது.

அன்றும் அப்படித்தான் நேரம் இரவு பத்தை தாண்டிகொண்டிருந்தது. அப்பாவும் அம்மாவும் வெளியே விறாந்தையில் இருந்து பழைய கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்குதான் அதில் பங்கு பெறவும் விருப்பம் இல்லை படுத்தால் தூக்கமும் வரவில்லை. எனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தேன். ஆர்ணிகன் குட்டி.. நீ வாறேண்டோன நம்ம காட்டான் இருக்கான் இல்ல.. அவனிட்ட சொல்லி கொழும்புல இருந்து கொண்டு வந்த கட்டில், அப்பம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. வெளியே பேரிரச்சலுடன் மழை பெய்துகொண்டிருந்தது. காற்றோடு போராடும் மரங்களின் அலறல். திறந்து மூடும் ஜன்னல் கதவுகளின் சத்தம் என அந்த இரவு பயங்கரமாகவும் ரசிக்கும்படி ரம்மியமாகவும் இருந்தது. இந்த நேரங்களில் மர்ம நாவல்கள் படிப்பது எனக்கு விருப்பமான ஒன்று. எழுந்து சென்று என் பெட்டியை திறந்து ஒரு புத்தகத்தை எடுத்து கட்டிலில் படுத்தபடி வாசிக்க தொடங்கினேன். சில நிமிடங்கள் கரைந்திருக்கும்.. அப்போதுதான் என் வாழ்க்கையை புரட்டி போட்ட அவளை சந்திக்க நேர்ந்தது.

எதாச்சையாக ஜன்னல் பக்கம் திரும்பிய எனக்கு பெரிய அதிர்ச்சி.. பின்னே இருக்காதா..!!புராணங்களிலும் கற்பனை கதைகளிலும் அறிந்த தேவதையை நேரில் அதுவும் அருகில் பார்த்தால் யாருக்குத்தான் அதிர்ச்சி வராது. எங்கள் வீட்டின் பின் பின்புறம் சற்று தள்ளித்தான் ஆற்றங்கரைக்கு போகும் சிறு மணல் பாதையுண்டு. அதன்வழியாக போனவள் திடீர் மழைக்கு என் அறையின் ஜன்னல் அருகே ஒதுங்கி இருக்கின்றாள்  போல். நிலவை போல் சுத்தமான வட்டமுகம்.. திருக்குறளை போல் சிக்கனமான சிறு உதடுகள்.. குளிரில் படபடக்கும் உதடுகள் இடையே தெரியும் முத்து பற்கள்.. பெரிய விழிகள்.. பாதி நனைத்த உடையை மீதியையும் ஈரமாக்கும் தண்ணீர் சொட்டும் கருங்கூந்தால்.. ஈரப்பாவாடையை குனிந்து பிழியும் போது அங்கங்கே திமிரும் இளமை..... கடவுளே.. இப்படியொரு அழகியை இதுவரை நான் பார்த்ததே இல்லையே!! அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்துகொண்டு அறையுனுள் நான் நின்றேன். எவ்வளவு நேரம் அப்படியே நின்று இருப்பேனோ தெரியவில்லை. ஏதோ மூளையில் உறைக்க சட்டென திரும்பியவள் தன்னையே வெறித்து பார்த்துகொண்டிருக்கும் என்னை பார்த்ததும் அந்த அழகிய விழிகள் மிரட்சியால் அகல விரிந்தது. சில விநாடிகள்தான் என்னை பார்த்திருப்பாள் சட்டென கொட்டும் மழையில் இறங்கி இருட்டினுள் ஓட தொடங்கினாள். நான் செய்வதறியாது இருட்டினுள் அவள் உருவம் மறையும்வரை பார்த்துக்கொண்டே நின்றேன்.

தொடரும்...


குறிப்பு 01: இத்தொடர் யுத்தம் நடந்த காலபகுதியில் நடப்பதாகவே எழுதப்பட்டுள்ளது.
குறிப்பு 02: இத்தொடர் ஒரு சிறு குறுந்தொடர்.. சில பகுதிகளுடன் முடிவடையும்.
குறிப்பு 03: இத்தொடரில் வரும் காதாபாதிரங்களோ கதையோ உண்மையல்ல முழுக்க முழுக்க கற்பனையே.. (அவ்வ..)


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...