ஞாயிறு, ஜனவரி 08, 2012

கண்ணம்மா+கவிதை+விமர்சனம். ஒரு விளக்கம்.. சிறு பிரிவு..

வணக்கம் நண்பர்களே..
முடிந்த எனது "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.." தொடரை அப்படியே கவிதையாக வடித்து மகேந்திரன் அண்ணா அனுப்பி இருந்தார். அதேபோல்.. நேசன் அண்ணா தொடர் பற்றிய ஒரு நடுநிலையான சிறப்பான விமர்சனம் ஒன்றை எழுதி அனுப்பி இருந்தார். அவர்களுக்கு என் அன்பை சொல்லிக்கொண்டு இன்று அவற்றை பார்ப்போமா..?

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. - கவிதை.
வானவூர்தி ஏறிப்போய் 
வான்வளர்ந்த நாடெல்லாம்
வக்கனையா ஆர்ணிகன் நான்
வாகாக சுற்றி வந்தேன்!

கருசுமந்த நாட்டுக்கு
கனவோடு வருகையிலே
காட்டாறு போல் நெஞ்சு
கரைபுரண்டு ஓடுதய்யா!!

பெத்தவங்க அருகிருந்தும்
பொல்லாத எம்மனசு
பொற்கிளி அவளோட
பூமுகத்தை தேடுதய்யா!!
சுத்தமான இரத்தத்தை
சுத்திகரிக்கும் காற்றுகூட
சுவாசத்தை மறந்துபுட்டு
சுலக்ஷிகாவை  நாடுதய்யா!!
*** *** ***
வளமான வன்னியப்பா
அதிலொரு நெடுங்கேணியப்பா!
அப்பா பிறந்த ஊருன்னு
அப்பம்மாவை பார்க்கப் போனேன்!!

என்னைப்பாத்த போது
எங்கப்பாவைப் போலன்னு!
காமாட்சி அப்பம்மா
உச்சிமோந்து பார்த்தாரே!!
ஊர்சுத்தி பார்த்தாலும்
ஊஞ்சலாடி வந்தாலும்!
ஊமையான எம்மனசு
என்னவளைத் தேடியதே!!

பால்நிலா தவறிவந்து
பால்கனியில் விழுந்ததய்யா!
பாவையந்த சுலக்ஷிகாவோ
பார்வையிலே விழுந்தாளே!!
*** *** ***
வந்துபோன தேவதையை
வாசலிலே தேடிநின்றேன்!
வந்தசுவடு தெரியவில்லை
வாடிமனசு போச்சுதய்யா!!
நொந்துபோன மனத்தோட
நொடிப்பொழுது சுற்றிவர!
சலசலக்கும் கம்மாக்கரையில்
காலாற நடந்துவந்தேன்!!

வரைந்துவைச்ச சித்திரம்போல்
பாவையங்கு வந்தாளே!
கண்காண நினைச்சிருந்த
தரிசனம் கிடைத்ததய்யா!!
பொன்னெழில் கொண்டவளோ
கண்மருண்டு விழித்தாளே!
என்னைக்கண்ட மறுகணமே 
துள்ளிச்சென்று போனாளே!!
சித்திரத்தை மறுபடியும் 
நித்தமும் நான் கண்டிடவே!
பொத்திவைச்சேன் ஆசைகளை 
முத்துப்போல என்நெஞ்சில்!!
*** *** ***
காத்திருந்தேன் கொக்குபோல
பூத்துவந்த பூவைக்காண!
சந்தர்ப்பம் வைத்ததுமே
உதிர்த்துவிட்டேன் சொல்சிறகை!!
உள்ளுக்குள்ளே ஆசைதனை 
நெக்குருக்கி வைத்தவள்!
கடகட கட்டைவண்டிபோல் 
கலகலத்து பேசக்கண்டேன்!!

பேச்சிலொரு புன்னகை
விழியிலொரு அபிநயமாய்!
வாய்மொழிந்த வார்த்தையதோ 
உணர்விழந்து இருந்ததய்யா!!
எழில்வண்ணப் பாவையவள்
ஏனிந்த உணர்வளித்தால்  
ஏழ்மையின் பாதிப்பாலோ? 
எனக்கது புரியவில்லை!!
வடிவான பாவையவள் 
வறுமையின் காரணத்தால்!
வழிந்துவரும் உணர்ச்சிக்கும் 
மதகு போட்டு தடுத்தாளே!!
*** *** ***
எட்டூரு வெடிக்கும் சத்தம்
என்காது எட்டியதே!
இழவேதும் விழுந்துருச்சோன்னு
படக்குன்னு எழுந்திருச்சேன்!!
கன்னியவள் அன்னையோட 
கதறல் அந்த சத்தமின்னு!
தெருவுக்கு வந்ததுமே 
தெளிவாக புரிந்ததய்யா!!
பாவிப்பய அவ அப்பனவன் 
பண்பாடு தெரியாது!

பட்டத்தண்ணி அடிச்சவன்போல்
பாவையவள் அம்மாவை
பச்சாதாபம் பாராமல்
தெருவிலே இழுத்துவந்து
பேயாட்டம் அடித்திருந்தான்!!
பணம் என்னும் ஓர் பிணமே
குணமாக ஆகாது!
பணமில்லாமல் போனதால்
குணமிழந்து போனாயோ?!
பணம் மட்டும் காரணியல்ல
பாழாய்ப்போன வாழ்க்கையிலே!
இயலாது போனதால்
இயைபிழந்து போனாயோ?!! 

திரும்பி நீயும் பாரப்பா
நீ பெற்ற பிள்ளைகளை!
செய்வதெனத் தெரியாது
சுவரொட்டி ஆனாரய்யா!
கனகமணிப்  பெண்ணவளை
கலங்க நீயும் வச்சிட்டியே!
கண்மணி கலங்கினாலோ
என்மனசு பொருக்குமாய்யா!!
கலங்காதே கண்மணியே
காலமெல்லாம் நானிருக்கேன்!
வீட்டுப்படி கடந்துவிடு
என்னோடு இணைந்துவிடு!!
*** *** ***
கண்களிலே கண்ணீர் ஏனடி..
காத்திருக்கேன் நானடி!
காலமிங்கே பதில் சொல்லும்
காதலை நீ ஏத்துக்கோ
கலங்காது பார்த்துக்கிறேன்!!
காமத்தில் விளையவில்லை
கடும் மோகத்தில் விளையவில்லை
உன் முக பாவத்தில் விளைந்ததடி
உன்னோடு நானிருப்பேன் என்கிறேன்
நீயோ என்னை விட்டு போவாய் என்கிறாய்..

உன்னைவிட்டுப் போனாலும்
உன் நெஞ்சை விட்டுப் போவதில்லை ..
பதில் சொல்லடி கண்மணியே!!
அன்பான ஆர்ணிகனே
ஆசையுள்ள மன்னவனே!
மயங்காது சொல்றேன்யா
மங்காத வைரம் நீ!

என்னப்பனாத்தா படுந்துயரம்
உனக்கிங்கே புதியதாய்யா!
அவுகளை விட்டுபுட்டு
உன்கூட ஓடிவந்தா
ஊர் என்ன தூற்றாதாய்யா!
மன்னிச்சிவிடு மன்னவனே
மண்குதிரை நானய்யா!!
*** *** ***
ஏகபோக வாழ்க்கைய
ஏற்றத்தோட வாழ்ந்தவன் நீ!
என்னைய கட்டிக்கிட்டு
ஏழ்மையாக வேண்டய்யா!
தோளோட தோளுரசி
தெம்மாங்குப் பாட்டுப்பாடி!
உப்புமூட்டை நீ தூக்க
நெடுந்தூரம் போயிடவே
மனசுக்குள்ள கனவுதாய்யா!!

எனக்காக உன்னிலையை
இறக்கிடவே மனமில்லை!
இன்னொருத்திக்கு விட்டுத்தர
எனக்கிங்கே சம்மதமில்லை!!
அடைமழை பெஞ்சதுவே
அடிமின்னல் அடித்ததுவே!
கனத்த இடியது
இனிப்பாக இடித்ததுமே
மாந்தளிர் மேனியவள்
எனைக்கட்டிக் கொண்டாளே!!
*** *** ***
கொளுந்துவிட்டு எரியுதடி
கூட்டிவைச்ச உணர்ச்சியெல்லாம்- ஞானத்தங்கமே
என்னுடல் உரசிப்போகவில்லை
உயிர் உரசிப்போகிறாயே - ஞானத்தங்கமே!!!
உரசிவிட்டுப் போனபின்னே
உன்னைநானும் பார்க்கவில்லை!
கனத்த கூட்டமொன்று
உன்வீட்டின் முன்னிற்க
உணர்விழந்து போனேனடி!!

என்னவென்று தெரியவில்லை
ஏதென்று புரியவில்லை
என் மனசு துடிக்குதடி
ஏங்கித் தவிக்குதடி!
கூட்டமிதை பார்த்தபின்னே
மனசு கூடுவிட்டு பாய்ந்துவந்து
நாடுதடி உன்னுருவை!!

எமகாதக அப்பனவன்
திரும்பப் பேய் பிடிச்சிப்போய்
சதிராட்டம் ஆடினானே!
அவன் கை உன்மேலே படுமுன்னே
பாய்ந்து பிடித்தேனே!!
என் தோள் சாய்ந்துவிட்டாய்
ஆதரவு தேடி நின்றாய்!

எனைக்கட்டி போய்விடுன்னு
விழிநீர் உதிர்த்து நின்றாய்!!
புளியந்தோப்பு குயிலோன்னு
குக்கூன்னு கூவிருச்சி!
சாறெடுத்த கரும்புபோல
சக்கையான எம்மனசு!
நீர்ச்சத்து ஏறிப்போச்சு
நீலக்குயில் உன்மொழியால்!!

திடீரென்று ஒர்கரம்
எனை இழுக்கக் கண்டேனே!
என்னப்பா கையதுன்னு 
திரும்பியதும் தெரிஞ்சதுவே!
வாடா பொறத்தாலன்னு
இழுத்துச்சென்று போகையிலே 
என்னுயிர் போனதுபோல் 
உயிரிழந்து நின்றேனே!!
*** *** ***
வானிடிந்து போனதுபோல் 
வாழ்விழந்து நின்றேனே!
பெத்தவங்க பேச்சுக்களை 
புறந்தள்ள முடியாம
வெளிநாடு வந்தேனே!!
உடல்மட்டும் தானிங்கே 
உயிரில்லை கண்மணியே!
உயிராக நீ எப்போ
எனைச் சேர வருவாயோ!!

காமாட்சி அப்பம்மா 
தளர்ந்து போனாங்கன்னு!
இடிபோல ஒரு செய்தி 
தந்திமூலம் வந்ததய்யா!!
பதிப்பதற்கு பதிலாக
மனம் குதூகலித்துப் போனதய்யா!
மாங்குயிலே உனைக்கான
மறுபடி சந்தர்ப்பமோ?!!
*** *** ***
நெஞ்சமதில் மஞ்சமிட்டு 
பஞ்சனை கொண்டவளை!
கொஞ்சமேனும் பார்த்திடவே 
சஞ்சலம் கொண்டேனே!!


படுத்திருந்த அப்பம்மா 
படக்குன்னு எழுந்துவிட்டார்!
என்னைப் பார்க்கவே 
காத்திருந்தது போல!!

வீடெல்லாம் மகிழ்ச்சியாய்
சாம்பிராணி வாசனையாய்
பரவிக் கிடக்க - என் 
மனம் மட்டும் 
விட்டில் பூச்சியாய் 
சிறகொடிந்து நின்றது!!

குற்றம் செய்த என்மனம் 
குறுகுறுத்து நின்றது!
கோலமகள் அவளைக்காண
படபடத்து நின்றது!!

ஆவலை அடக்காது 
நடைபோட்டேன் அவள் அகத்திற்கு!
பேய்பிடித்த அப்பனவன் 
சாதுவனாய் சாய்ந்திருந்தான்!
சிறுகுணம் கொண்ட அந்த 
மனிதப்பதரை புறந்தள்ளி 
என் நாயகியின் தடம் தேடினேன்!!

பொலபொலத்தான் கண்ணீரை 
பொல்லாத அப்பனவன்!
போய்ப்பாரு என்றானே 
போக்கத்த மனிதனவன்!!

திக்கித்துப் போனேன் 
திசைகண்ட போதங்கே!
எழிலான என்னவளோ 
நிழற்படமாய் போனாளே!!

தென்பாண்டி திரவியமே 
தெள்ளுதமிழ் கவிமலரே!
போன இடம் ஏதடியோ?!!
சொல்லாமல் போனாயே!!

வார்த்தையொன்னு சொல்லியிருந்தால் 
வாடிப்போகுமுன்னே வாசமலர் தந்திருப்பேன்!
ஏமாத்தி போனானென்று 
எனை விட்டுப் போனாயோ?!!

தவறி விட்டாயடி - அடி கண்ணம்மா 
வார்த்தை தவறி விட்டாயடி!
உன்னுயிரை எங்குவிட்டாய்
சொல்லிவிடடி 
அங்கே நான் தகனம் ஆகிறேன்!!!!

அன்பன்-: "வசந்த மண்டபம்" மகேந்திரன்.
மகேந்திரன் தளம்.


வார்த்தை தவறி விட்டாய்.. - விமர்சனம். 
னி உலக இலக்கியத்திற்குத் தமிழீழ இலக்கியங்கள் தான் தலமை தாங்கும் என்று கூறிய எஸ்.பொ(எஸ்.பொன்னுத்துரை), செ.யோகநாதன் போன்றோரின் கூற்றுக்கள் சிற்றிதழ்களிலும் வாரசஞ்சிகைகளிலும் விவாதமாக நீண்டு சென்று ஊறுதியாகும் நாள் தொலைவில் இல்லை என்பதைப் போல், இலவசமான கூகுள் வலைப்பூ ஊடாக பல ஈழத்து பதிவாளர்களும் அந்த கூற்றினை உறுதியாக்கும் வண்ணம் தம் வாழ்வின் சில அனுபவங்களை காத்திரமான தொடராக இனையம் மூலம் நம் இமைக்குள் வீழ்த்தி இதயப் பரப்பெல்லாம் இன்பம் பொங்கும் உணர்ச்சிக்குவியலாக படைத்து வருகின்றார்கள்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக ஒரு வாசகனாக, ஒரு வலைப்பூவில் அதிகமாக வாசல் ஓரம் காத்திருக்கும் வாயில் காவலன் போல் காத்திருந்தது, 'வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா' என்ற தொடரினைத் தாங்கிவரும் கற்றது தமிழ் வலைப்பூவில்,  தொடர்களுக்கு உரிய அங்கிகாரம் கிடையாது என்பதை ஆரம்பத்திலேயே அறிவித்துக் கொண்டு வந்த ஆசிரியர் அவர்களின் நம்பிக்கையில் 'காத்திரமான எவையும் வாசிப்பு உலகில் வரவேற்கப்படும்'  என்பதற்கு சாட்சியாகப் போன தொடர் இது. 

ஈழத்து மூத்த தலைமுறையினர் யுத்தம் என்ற கொடிய புயலில் சிக்கி அகதியாக வெளியேறி ஏதிலிகளாக வலம் வரும் இன்றைய நிலையிலும், தாயக நினைவுகள் தலைக்கவசமாக எண்ணத்தில் இருக்கும் உணர்வுகளினால் தந்தையின் வற்புறுத்தலில் விருப்பம் இன்றி இலங்கையில் வேர்களைத் தேடிய விழுதுகள் போல் வன்னி மண்ணை மிதிக்கும் அடுத்த தலைமுறைத் தனயனான ஆர்ணிகன் என்ற பாத்திரம் மூலம் நெடுங்கேணி மண்ணில் கதைக்களம் பயனிப்பதன் ஊடாக, அருமையான மொழியாளுமையுடன் இலக்கிய வர்ணனைகள் தங்க முலாம் பூச, புலம் பெயர்தவன் வாரிசு ஆர்ணிகனின் கண்டதும் பார்வை கொண்டதுமான புலத்து மங்கை சுலக்சிஹாவின் மீது அனுதாபத்தினால் வந்த விடலைப்பருவக் காதல் வலியை, கடந்த சில வாரங்களாக ஆர்ணிகன் தன் அப்பம்மா வீட்டிற்குப் போவதன் ஊடாக பயணத்தை தொடங்கி, அங்கே கண்டதும் காதல் என விழியில் மழைக்கு வீட்டுக் கோடியில் ஒதுங்கிய ஏழைக்குமாரி இவன் மனதிற்குள் வந்து கோட்டைராணி ஆவாளா சுலக்சிகா என்ற அனுதாபக் காதலையும் சுவாரசியமாக பயணிக்க வைத்த ஆசிரியர் துசியந்தன் அவர்களைப் பாராட்ட வேண்டும்!

இனிய தித்திக்கும் தமிழ் மொழியில் அழகு உவமை அணிகள் ஆபரணம் பூட்டி தொடரினை காதல் ரசம் பொங்கும் கோர்வையாக்கி இருக்கின்றார் . உவமையில் இவரின் எழுத்து நடையை மெச்சுவது என்றால் சுலக்சிஹாவை வர்ணிக்கும் இடத்தில் காதல் கரைபுரண்டு ஒடுவதை நோக்கும் வரிகள் தான். இதிலும் புதுமை எழுத்துலகில் 'திருக்குறளைப் போல் சிக்கனமான உதடுகள்' என்ற உவமையணி ஒப்பீடு உச்சம். இதுபோல் பல இடங்களில் தன் புலமையை இயற்கையின் அழகை வர்ணிப்பதிலும், மனதில் கிராமத்து எழிலையும் படம் பிடித்துக் காட்டும் இடங்களில் கதையின் போக்கு அசைக்கமுடியாத நினைவுகளை மீட்டுகின்றது. சுலக்சிஹாவின் வறுமை நிலை, வீட்டின் வர்ணிப்பு, காதலில் அவளின் கேள்விக் கணைகள் அதிலும் நங்கையின் சொல்லாடல் 'மண்குதிரை' என்ற விழிப்பு ஒரு செதுக்கல்! இத்தனை வியப்புக்களையும் தாண்டி ஆர்ணிகன் சுலக்சிஹா காதல் புலத்துக்கும் புலம் பெயர் உறவுக்கும் இடையில் ஒரு உறவுப்பாலமாக வந்து சென்றது சமுகத்தின் பார்வையில் சுலக்சிஹா என்ற மங்கையின் நாட்டுப் பற்றும், வறுமையிலும் விடியலைத் தேடும் ஏழைக்குடும்பத்தின் எதிர்பார்ப்புக்களை சுமந்து சென்று ஒரங்க நாடகம் போல இந்த தொடர் மனதில் சலனத்தை விட்டுச் செல்கின்றது.

ஆர்ணிகன் காதல் ஒரு அனுதாபக் காதல் என்பதே இந்தத் தொடரின் முடிவாகிப் போனது. தந்தையின் பிடிவாதத்தால் பிரென்ஸ்சு தேசம் வருவதும் காலமாற்றத்தின் இடைவெளியில் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு பாட்டியின் சுகயீனம் காரணமாக வழிகிடைக்கும் போது மீண்டும் சுலக்சிஹாவை சந்திக்கும் ஆவலில் சென்றால், அங்கே அவளின் உயிர் பிரிவும் அதன் ஊடே அவள் எண்ணங்களின் ஊடே காதலி ஒரு குழந்தை போல் கைவிரல்பிடித்து நினைவுகளோடு வாழ்க்கை பூராவும் பயணிப்பாள் என்று சொல்லி கதையை முடித்த விதம் சிறப்பு!

தொடரில் சில குறைகளையும் சுட்டிக் காட்டுவது ஒரு வாசகனின் கடமை அல்லவா? முதலில் கதை ஏனோ தானோ என்று பயணித்தது சுலக்சிஹாவின் வரவின் பின் தொடர் மிகவும் சுவாரசியமாகப் பயணித்தாலும், புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் போது தந்தையின் தாயின் எண்ணங்களையும் பதியம் போட்டு இருக்கலாம். முதல் முதலாக தாயகம் போகும் தனையன் பாத்திரம் நேரடியாக வன்னிக்களத்தில் இருந்து பயணிப்பது சினிமாத் தன்மை போல இருக்கு. விமான நிலையத்தில் இருந்து தொடங்கினால் இன்னும் தொடரினை நீண்டதாக செய்து இருக்கலாம் என்றாலும் ஆசிரியர் முதல் தொடர் என்பதால் விட்டு விடலாம். பிரான்ஸ் தேசத்தில் இருந்து செல்லும் பிரெஞ்சில் பிறந்து, படித்து ,பிரென்ஸ் குடியுரிமை உள்ள தனையன் இத்தனை தூரம் தமிழில் சுலக்சிஹாவுடன் சம்பாஸனை செய்யும் இடம் மொழியை நேசிக்கும் ஒருவன் என்றாலும் இயல்பாக வரும் பிரென்ஸ் மொழியை பாவிக்காமல் இருப்பது சாத்தியமா என்று சிந்திக்கவைக்கின்றது.

அன்னிய தேசத்தில் இருந்து வரும் ஆடவனுடன் கிராமத்து மங்கை சுலக்சிஹா இப்படி மனம் விட்டு அதிகம் பேசும் சுழல் அந்த இடத்தில் சாத்தியமா என்றால்.... ஆசிரியர் சினேஹாவின் சிரிப்பூ( பூ) காதில் வைக்கின்றார். உங்க நாடு எங்க நாடு என்று பிரித்துப் பேசும் ஆர்ணிகன் அத்தனை தூரம் போயும் தாய் மண்ணில் அன்னியமாக இருக்கும் தன்மையை ஏன் கொண்டுவந்தார் என்பதை கொஞ்சம் விளக்கி இருக்கலாம். ஏழைக்குமாரியை விரும்பும் புலம் பெயர் வாலிபனின் கேள்வியில் சுலக்சிஹாவின் படிப்பையும் கொஞ்சம் அலசி இருக்கலாம்! குடும்பத்தில் நிகழும் சண்டையின் ஊடே தந்தையின் இயலாமையின் சமூகக்காரணியையும் அலசி இருக்கலாம்! பாரதியின் கண்ணம்மாவும் கண்ணதாசனின் வார்த்தை தவறிவிட்டாயும் கடன் வாங்கியது தலைப்புக்கு பஞ்சமோ என ஐயம் என்றாலும் சுவையையான காதல் தொடரினை தந்த நண்பனுக்கு தனிமரத்தின் சிறப்பு வாழ்த்துக்கள்.

தொடரில் பலரும் சொல்லியது பந்தி பிரிக்கவில்லை என்பது!   புலம் பெயர் வாழ்க்கையிலும், தேடலிலும் நேரம் இன்மை என்பது ஒரு முக்கிய பிரச்சனை. துஷியும் இதற்க்கு விதிவிலக்கு இல்லை என்பதை நானும் ஆமோதிக்கின்றேன். ஆர்வத்தில் எழுதும் போது ஒதுக்கும் நேரமே எங்களின் இமையை மூடும் நேரத்தில் துண்டு விழும். இதையும் புரிந்து கொள்ளுங்கள் உறவுகளே! 

தொடரில் முடிவை இப்படி முடித்திருப்பது சோகம். சுலக்சிஹா படத்தில் பூமாலை போடப்பட்டத்தன் பின் புலம் என்ன? ஒருவேளை தற்கொலை செய்துகொண்டாளா?அல்லது நாட்டின் போர்ச்சூழலில் போராளியாகி மரணத்தைத் தழுவினாளா? என்பதை கொஞ்சம் விளக்கியிருந்தால் இந்த தொடர் ஒரு நாவல் ஆகும் வாய்ப்பு இருந்திருக்கும். தாய்,தந்தை ,அப்பம்மா மற்றும் சுலக்சிஹா குடும்பத்தின் நினைவலைகளை அதிகரித்தால் இன்னொரு காவியம்!

 'வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா!' தொடரின் அழகிய காட்சி படத்தை தந்த கந்தசாமிக்கு ஒரு நன்றி! இந்த தொடருக்கு என்பார்வையைச் சொல்ல வாய்ப்புத் தந்த தம்பி ராசுக்கு விசேட நன்றி! இப்படியான காத்திரமான பல தொடர்களை துஷ்யந்தன் வலைப்பூவில் தொடர்ந்தும் மாலை ஆக்கனும் என்று வேண்டி விடைப்பெறும்
வாசகன்-: "தனிமரம்" நேசன்.
நேசன் தளம்

சில மாத இடைவெளிகளுக்கு பின் மீண்டும் சந்திப்போம்...
அன்புடன்-: துஷ்யந்தன்

செவ்வாய், ஜனவரி 03, 2012

'நைட் பார்ட்டி'யில் ஒரு 'பதிவர்'..!! புகைப்படங்கள் இணைப்பு.

முக்கிய குறிப்பு: இப்பதிவுக்கு  சிறுவர்கள்  முதல்  பெரியவர்கள்  வரை  உள்ளே வரலாம். ஆனால் கலாச்சார காவல்காரர்கள் மட்டும் உள்ளே வராதீங்கப்பா.. ப்ளீஸ்.

'நைட் பார்ட்டி'யில் ஒரு 'பதிவர்'.. அட யாருடா அந்த பதிவர் என்று பார்க்க ஓடியா வந்தீங்க..??!! ஹீ..ஹீ.. அவரு யாருமே இல்லை அடியேன்தான்.

முதலிலேயே ஓப்பனாகவே சொல்லிக்கிறேன். நான் ஒரு "நைட் பார்ட்டி ப்ரியன்"  காலேஜ் வாழ்க்கையில் தொத்திக்கொண்ட பழக்கம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்கிறது.

காலேஜ் படித்த காலத்தில் எனக்கு நிறைய பிரெண்ட்ஸ் (இப்போ மட்டும் என்னவாம்!).  தமிழ் பிரெண்ட்ஸ் என்பது ரெம்பவே அரிது (மூன்று பிரெண்ட்.. நிவேதா&திஜய்&அகில்). மற்றும்படி எல்லாமே வெளிநாட்டு நண்பர்கள்தான்.
ஆகையால் இந்த கலாச்சார செண்டிமேண்டுக்குள்  எப்பவும் நா(ன்)ங்கள்  சிக்கியது இல்லை. என்னைப்பொறுத்தவரை ஒவ்வொரு நிமிடமும் எனக்கானது நாளைய நாட்கள் நிரந்தரம் அற்றவை. சோ..  இந்த நிமிஷம்?!! ஹும்... என்ஜாய் மக்கா.

நாங்கள் எப்பவும் "நைட் பார்ட்டி" தேடி அதிகம் எங்கேயும் போவதில்லை. எங்களுக்குலேயே அதை உருவாக்கி கொள்வோம். அதுக்கா மேட்டரா  இல்லை?!!. புதுவருசம், பிறந்தநாள்,காதலி கிடைச்ச  நாள், காதலி பிரிந்த நாள் என்று எல்லாவற்றையும் ஹப்பியா கொண்டாடுற ஆக்கள் இல்ல நாங்க.

பாடசாலை வாழ்க்கை முடிந்து ஒவ்வொருவரும் வேறு வேறு பக்கம் திரும்பினாலும் ஒவ்வொரு மாதத்திலும் முதல் சனி.. எங்க நட்புக்கள் சேரும் சொர்க்க நாள். (சில வேளைகளில் ஒரு மாதத்தில் இரண்டு தடவை கூட சந்திப்போம்). எங்கள் நட்பு கூட்டத்துக்குள் இப்போதுவரை இருக்கும் ஒரே தமிழ் பொண்ணு நிவி(நிவேதா) தான். தமிழ் பசங்கள்..!!  நானும் திஜையும் அகிலும்.

எங்கள் "நைட் பார்ட்டி"கள் பெரும்பாலும் இரவு பதினொன்றுக்கு தொடங்கினால் விடிய விடிய நடந்து அதிகாலை ஜந்து.. ஐந்து முப்பதுக்கு முடிந்துவிடும். அப்புறம் என்ன!! சண்டே புள்ளா தூக்கமோ தூக்கம்தான்.

"நைட் பார்ட்டி" என்றாலே "தண்ணி" இருக்கும்தான் என்றால் அதை நான் மறுப்பது இல்லை. ஆனால்..! அதில் என்ன தப்பு என்று திருப்பி கேட்க கூடிய ஆள்தான் நான். ஆனா.. எங்கள் நட்பு வட்டத்துக்குள்ளேயே தண்ணி என்ன பியரை கூட முகர்ந்து பார்க்காத ஆட்கள் நானும் நிவியும்தான். (அவ்வ.. நம்புங்கப்பா). ஆனால்..! எங்க ஏரியா... டான்ஸ் டான்ஸ் டான்ஸ். நிவி எல்லா "நைட் பார்ட்டி"க்கும் வரமாட்டாள்.. (வீட்ட எத்தனை பொய்  சொல்லிட்டு வரணும்!! அவ்வ). அவள் வராத நாட்களில்... தனித்துவிடப்படுகிற ஆள் நான்தான். (அவங்க தண்ணியடிக்க தொடங்கிட்டா என்னை எப்படி கண்டுப்பாங்க..) ஆனாலும் வேலை வேலை என்று ஓடி திரிந்துவிட்டு மனசை ரிலாக்ஸ் ஆக்கும் இடம் அது. என் நீண்டகால நட்புக்கள் கலக்கும் இடம் அது.

"நைட் பார்ட்டி" பற்றி பலருக்கு பலவித விமர்சன கருத்து இருக்கலாம். என்னை பொறுத்தவரை.. அங்கு அடிக்கடி போகின்றவன் என்ற முறையில் சொல்கிறேன். அது ஒரு மிக மிக சாதாரணமான ஒரு விடயம்.

தெரியாத முகங்களுடன் "நைட் பார்ட்டி"யில் கலந்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது பற்றி நோ கமெண்ட்ஸ்.  ஆனால் தெரிந்த நட்புக்கள் எல்லாம் ஒன்று கூடி "நைட் பார்ட்டி" கொண்டாடுவதில் என்ன தப்பு??! ஒன்றாக இருந்தவர்கள் வாழ்க்கையின் தேடல்களால் பிரியும் போது அந்த பிரிவை போக்க இப்படி ஒன்று கூடுவதில் புதுசா என்ன வந்திடப்போகுது?!!

அங்கு யாரும் யார் கையை பிடித்தும்  இழுப்பது இல்லை. பிடித்தவன் "தண்ணி" அடிக்கிறான்.. பிடிக்காதவன் "கொக்கா"  அடிக்கிறான். பிடித்தவர்களுடன் பிடித்தவர்கள் டான்ஸ் ஆடுகிறார்கள்... கவனிக்க!! அங்கே எல்லோரும் தங்கள் தங்கள் சுதந்திரம் அறிந்து அதற்குள்ளேயே நிற்கிறார்கள்.

"நைட் பார்ட்டி" என்றாலே செக்ஸ் தான் என்ற பரவலான கருத்தை நான் வண்மையாக கண்டிக்கிறேன். அதற்காக அது அறவே இல்லை என்று எங்கேயும் நான் வாதிட வரவில்லை. செக்ஸ் என்பதை தாண்டி பல உணர்வு பூர்வமான விடயங்களுக்காக பல "நைட் பார்ட்டி"கள் உருவாகின்றது  நடக்கின்றது என்பதுதான் உண்மை.

அப்படியானால்... "நைட் பார்ட்டி"களில் நடக்கும் செக்ஸ் மேட்டர்களுக்கு உன் கருத்து என்ன என்று யாராவது என்னிடம் கேட்டால்..! என் பதில் "நோ கமெண்ட்ஸ்".  இல்லை.. சொல்லித்தான் ஆகணும் என்று அடம்பிடிப்பவர்களுக்கு என் பதில்.. "நான் தனி மனித சுதந்திரத்தை மதிப்பவன், மற்றவர்களை நோகடிக்காமல் இருவர் சம்மதங்களுடனும் எது நடந்தாலும் அதில் தப்பே இல்லை என்று உறுதியாய் நம்புகின்றவன்."

சரி... ஏன் இப்போ இவ்ளோ விளக்கங்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏதோ சொல்லணும் என்று தோணிச்சு அதான். காரணாம்.. நண்பன் மதுரன் சொன்னது போல் "எல்லோருக்கும் தாராளமான சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அந்த சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தை பறிப்பதிலேயே செலவாகிறது." குறிப்பாக நான் பதிவுலகம் வந்த இந்த குறுகிய காலத்தில் பதிவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் எல்லோரும் அடிக்கடி பொங்கி எழும் கலாச்சார காவலர்களாகவே தங்களை முன் நிறுத்துகிறார்கள். இந்த கலாச்சாரத்தை அடுத்தவர்களிடம் மட்டுமே எதிர் பாக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் இது விதிவிலக்கு.

என் வேலைத்தளத்தாலும் அடிக்கடி ஏதாவது ஒரு பார்ட்டி நடந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் இதற்கு நான் அதிகம் முக்கியம் கொடுப்பது இல்லை. காரணம் அங்கே இருப்பவர்களும் என் நண்பர்கள் தான் என்றாலும் பல வயது கொண்டவர்கள் இருப்பதால் அங்கே இருக்கும் ஒரே "குட்டிப்பையன்" (அவ்வ) நான்தான் என்பதாலும் பெரும்பாலும் அதை தவிர்த்து என் பாடசாலை  நண்பர்களுடான "நைட் பார்ட்டி"களுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன். 

31 .12 .2011  என் வேலைத்தளத்தால் பாரிஸின் மிக முக்கியமான உயர்ந்த ஸ்டார் ஓட்டலில் நடந்த எங்கள் "நைட் பார்ட்டி" செம கலக்கலாக மறக்க முடிதாத அளவுக்கு நடந்து முடிந்தது. இதில் உள்ள என் புகைப்படத்தை தவிர மற்றது எல்லாம் நான்தான் எடுத்தேன் ஆக்கும்.

இனி உங்களுக்காக சில புகைப்படங்கள். 
டேவிட் கடுப்பேத்துறான் மைலார்ட்

இதுல ஒண்ணு நம்ம ஆளு.. யார் என்று கண்டுபுடியுங்க பார்க்கலாம்.. ஹா ஹா .

அசீஸ், மரினா ஆள் பாவம்டா :(

ஒரு பேச்சுக்கு சொன்னேன், பாருங்க எப்புடி போய் போஸ் கொடுக்கிறான் என்று.. பாவிப்பய..  அவ்வ......
பெரிய்ய்ய்..ய மடோனா என்ற நினைப்பு ..  எங்கள் வேலைத்தளத்தில் இவாக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கு. காரணம் நான் சொல்லியா உங்களுக்கு தெரியனும்.


இவங்க ரெண்டு பேரும் "அவங்க"



செல்லம் சொபியா, உன்ன மட்டும் தான போட்டோக்கு போஸ் கொடுக்க சொன்னேன்.  வை திஸ் கொலை வெறிடி... (டேய் துஷி உனக்கு இப்படி உடம்பு இல்லையே என்று கொத்தி சாரி.. குத்திக்காட்டுறாவாம்..!! அவ்வவ்.)


ஜோன்.. இங்கே ஒருத்தன் போட்டோ எடுக்கிறான் இல்ல ?!! என்னை  பாரடா.. அவ்வ
பார்ட்டிக்கு போனா இதான் துஷி சாய்ஸ் . (நம்புங்கப்பா..)

இது நம்ம பெஸ்ட் குறுப்... துஷி மட்டும் மிஸ்ஸிங் (அண்ணன் போட்டோ எடுக்கிறார் இல்ல..!!)

-:)  -(:- டான்ஸ் டான்ஸ் துஷி துஷி.. -:)  (:-


அறிவித்தல்-கடந்த பதிவில் முடிவுற்ற "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா" தொடரின் முடிவில் சிறு மாற்றம் வேண்டும் என்று நண்பர்கள்  பலர் (கிட்டத்தட்ட எல்லோரும்.. அவ்வ) கேட்டு இருந்தார்கள். நேரமின்மை காரணாமாக அந்த முடிவின் விளக்கமும் சிறு மாற்றமும் அடுத்த பதிவில்...











ஞாயிறு, ஜனவரி 01, 2012

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா..10. (இறுதி பகுதி)


மீண்டும் அவளை பார்க்க போகிறேனே என்ற நினைப்பில் மனசு சந்தோஷத்தில் தத்தளித்தாலும். மறு பக்கம் ஒரு வித பயம் மனதை இறுக்கத்தான் செய்தது.

சுற்றி சுற்றி வந்து அவளை காதலித்துவிட்டு.. அவள் மறுத்த போதெல்லாம் நம்பிக்கை வார்த்தைகள் கொண்டு அவளை மனம் மாற வைத்துவிட்டு, அவள் என்னிடம் தன் காதலை சொல்லி என்னை நம்பி நின்றபோது  ஒரு வார்த்தை கூட பேசாமால் அல்லவா நான் சென்றேன்.!!

எத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவளை விட்டு வந்தேன் என்பது என் மனச்சாட்சிக்கு தெரியும் என்று என்னை நான் சமாதானப்படுத்தினாலும். நான் அவளை தவிக்க விட்டு வரும்போது எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவள் இருந்தாள்!! அந்த நிலையில் எப்படி என்னால் அவளை விட்டு வர மனம் வந்தது!!! என் பக்க நியாயங்களை நான் எடுத்துவைத்தாலும் அவள் பக்க நியாயங்களும் அவளுக்காக வந்து என்னோடு மல்லுக்கட்டியது.

எது எப்படி இருந்தாலும் என் சுலக்க்ஷிகாவுக்கு என்னைப்பற்றி தெரியும். எனக்கு அவளைப்பற்றி தெரியும். கண்டிப்பாக அவளால் என்னை மறக்கவோ வெறுக்கவோ முடியாது. யாருக்காகவும் இந்த முறை அவளை தவற விடமாட்டேன்.  என் சுலக்க்ஷிகா இனி எப்போதும் என்னோடுதான். இந்த இரண்டு வருடங்களில் அவளை பிரிந்து நான் பட்ட வலிகள் எல்லாம் போதும். எனக்காக அவளும் அதிகமாகவே வலி கொண்டிருப்பாள். அவை எல்லாவற்றுக்குமே இன்றுடன் முற்றுப்புள்ளி. இன்றில் இருந்து என் சுலக்க்ஷிகாவின் சந்தோஷ நாட்கள் ஆரம்பம். அவளும் நானும் வாழப்போகும் அந்த அழகியல் காலங்கள் கண் எதிரேயே தெரிகிறது..

"ஆர்ணிகன் நேற்று இரவில இருந்து நீ ஒண்டும் சாபிடல்ல... ஏதாவது சாப்பிடன் புள்ள.." அம்மா தோள் தட்ட சுயநினைவுக்கு வந்தேன்.

கைகளை முறுக்கி சோம்பல் முறித்தவாறே "வேணாம்மா... பசிக்கல்ல... மனசே சரி இல்லைம்மா...." அசதியாக  சொல்லியவாறே அம்மாவின் தோள் சாய்ந்தேன்.

அம்மாவுக்கு புரிந்திருக்கும்... ஆனாலும் அதை அவர் ரசிக்கவில்லை என்பது அவர் முகத்தில் தெரிந்தது. எதையும் காதில் வாங்காதவர் போல் அப்பாவுடன் ஏதோ கதைக்க தொடங்கினார்.

கார் நெடுங்கேணியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. நான் அம்மாவின் தோளில் தலை சாய்த்தபடியே கார் கதவுகள் ஊடே வெளியே பார்வையை செலுத்தினேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட  இப்போது  ரெம்ப வித்தியாசம். அங்கங்கு புதிய வீடுகளும் கடைதெருக்களும் முளைத்திருந்தன.. இயற்க்கை வேறு தன் பங்குக்கு அந்த பகுதியை ரம்மியமாக்கி கொண்டிருந்தது. ஆனால் இதை எதுவுமே ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை. என்னை அவள் நினைவுகள் எங்கெங்கோ இழுத்து அலைக்களித்துகொண்டிருந்தது.

ல்லோருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. படுத்த படுக்கையாக கிடந்த அப்பம்மா மகனை கண்ட சந்தோஷத்தில் எழுந்து நடக்க தொடங்கியது. இதனால் என்றும் இல்லாதவாறு வீடு சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தது. வந்த சில நாட்கள் என்னை கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்த அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்த தினங்களில் என்னை கண்டுகொள்ளாமல் சுதந்திரமாக விட்டது எனக்கு இன்ப ஆச்சரியம்.

எங்கள் வீட்டு முற்றத்தில் உள்ள அந்த வேப்பமரத்தடியில்  நின்று முன்புபோல் அவள் வீட்டை பல தடவைகள் நோட்டமிட்டுவிட்டேன் ஆனால் அவளை மட்டும் காணோம். முன்பு வழமையாக நாங்கள் சந்திக்கும் ஆற்றங்கரையிலும் அந்த பாழடைந்த கட்டிடத்திலும் பழைய நினைவுகளை வேதனையுடன் மீட்டபடி கொக்குப்போல் தவம் கிடந்தேன்.. அப்போதும் அவள் வரவில்லை.

மனதுக்குள் பயங்கரமான கற்பனைகள் வேறு  முட்டிமோதி என்னை காயப்படுத்தி என் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தன. ஒருவேளை அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்குமோ..? கல்யாணத்தின் பின் அவள் அவனுடன் வேறு ஊருக்குப்போயிருப்பாளோ...? 'ச்சே...  இப்படியெல்லாம் என்னை நினைச்சிட்டே இல்ல..? ஆர்ணி..!!!'  அவள் என் முன்னாள் நின்று பரிதாபமும் கோபமும் கலந்து கேட்பதுபோல் இருந்தது. சட்டென நானே என் தலையிலேயே வலிக்கும்படி  இறுக்கி  குட்டிக்கொண்டேன். என் சுலக்க்ஷிகா அப்படிப்பட்டவள் அல்ல.. அவளால் என்னை தவிர இன்னொருவனை கற்பனைக்கு கூட நினைக்க முடியாது.

 ன்று மாலை எப்படியாவது அவளை பார்த்துவிடுவது என்று முடிவு எடுத்துக்கொண்டேன். அப்பம்மாவை பார்க்க  வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களால் வீடு அமளிப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த ஊட்டில் வீட்டை விட்டு நழுவிய நான் அவள் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைய தொடங்கினேன்.

வழமைபோல் சுலக்க்ஷிகாவின் தம்பி முற்றத்தில் சிரட்டைகளை அடுக்கி விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென என்னைக் கண்டதும்  அடையாளம் காண திணறியவன் பின் அடையாளம் கண்டு ஆச்சரிய புன்னகை வீசியவனிடம் நான் பேச எத்தனிக்க ஓடிப்போய் வீட்டினுள் ஒளிந்துகொண்டான்.

அவள் வீடு குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் நிலையில் இருந்தது. அந்த வீட்டின் தகரக்கதவை மெதுவாக தட்டினேன்.. பதில் இல்லை. கதவை லேசாக தள்ள அது உள்ளே திறந்துகொண்டது.. குனிந்து உள்ளே நிமிர்ந்து பார்த்தேன்.

தரையில் அமர்ந்தபடி சுவற்றுடன் சாய்ந்திருந்த சுலக்க்ஷிகாவின் அப்பா என்னுடைய திடீர் வருகையால் சடாரென எழுந்து நின்று என்னை ஆச்சரிய ரேகைகளை முகத்தில் அப்பியபடி பார்த்தார்.

அவரை உற்று நோக்கினேன். நான் முதற் சந்திப்பில் அவரை பார்த்தமைக்கும்  இப்போதைக்கும் ரெம்ப வித்தியாசம். அவர் உடம்பு மெலிந்து கண்களில் குழி விழுந்து மிக பரிதாபமாக இருந்தார்.

அவரின் செருமலில் சுயநினைவுக்கு வந்த நான்.. "சார்.. நா..நான் ஆர்ணிகன். சுலக்க்ஷிகாவோட  ப்..ப்ரெண்டு, ப்ளீஸ் நான் ஒருக்கா சுலக்க்ஷிகாவை பார்க்கலாமா?? ப்ளீஸ் சார்.. ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்கோ.. நாங்க சீக்கிரம் நாடு திரும்பணும். அதுக்குள்ள ஒருக்காவது..... ப்ளீஸ் பழசை எல்லாம் மனசில் வைச்சு என்னை திருப்பி மட்டும் அனுப்பிறாதீங்கோ... நா..நான் ஒரு தடவைதான்... அதுக்கப்பிறோம் போயிருவேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் சார்..."  நான் தடுமாறியபடி பரிதாபமாக கெஞ்ச, அவர் எதுவும் பேசாமால் எங்கையோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

"..இப்படி எதுவும் பேசாமல் இருந்தாள் எப்படி..? ப்ளீஸ் சார்.. சொல்லுங்கோவன் எங்கே சுலக்க்ஷிகா??!! நான் வந்ததில் இருந்து பாக்கிறேன் எங்கேயும் அவளை காணல்ல... எங்கேயாவது சொந்தக்காரங்க வீட்ட போயிட்டாளா..?"  நான் பேச பேச  அவர் கண்களில் இருந்து பொல பொல என கண்ணீர் கொட்டத் தொடங்கியது.

நான் அதிர்ச்சியோடு "என்ன சார் நடந்தது...?? ப்ளீஸ் சொல்லுங்கோ.. எங்கே சுலக்க்ஷிகா?? ப்ளீஸ் எங்க என் சுலக்க்ஷிகா?? எல்லோருமா சேர்ந்து அவளை என்ன செய்தனீங்க??!! ப்ளீஸ் சொல்லுங்கோ......" நான் கதறியபடி அவரை உலுக்க, அவர் அவள் பெயரை சொல்லியபடி வாய் விட்டு  கதற தொடங்கினார்.

நான் மேலும் பதை பதைப்போடு கண்களை துடைத்தபடி அருகில் சுவரோடு ஒட்டியபடி வெம்பி வெம்பி அழுதுகொண்டிருந்த அவர் மனைவியை பரிதாபமாக பார்த்தேன்.

அவர் வாயை இறுக பொத்தியபடி கண்களில் நீர் பெருக சுவற்றோடு சேர்ந்துதமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தவரின் கண்கள் எதிரே இருந்த சுவற்றில் நிலை குத்த...

திரும்பினேன்.  அங்கே... அ..ங்கே... என் கால்கள் தரையில் இருந்து நழுவ.. கண்கள் செருக... அருகில் இருந்த சுவற்றை பற்றிக்கொண்டேன்.

சருகான சிறு பூமாலையுடன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்த அழகிய பழைய புகைப்படத்தில் சுலக்க்ஷிகா புன்னகைத்துகொண்டிருந்தாள்.

அந்த புகைப்படத்தில் அவளின் அந்த காந்தக்கண்கள்  என்னை ஏதோ கேட்பது போலவே இருந்தது. அந்தப்புன்னகை அது... அது என்னை கேலி செய்வது போலவே இருந்தது.

"ஆர்ணி.. என்னைக்கல்யானம் பண்ணிக்கிறீயா? என்னை எங்காவது உன் கூட கூட்டிட்டு போயிறேன் ப்ளீஸ்.. எனக்கு யாருமே வேண்டாம்  நீ மட்டும் போதும். உயிர் போற வரைக்கும் உன் கூடவே இருக்கணும் போல இருக்குடா......"  என் கைகளை பிடித்து தன் நெஞ்சோடு அணைத்தபடி அன்று அவள் சொன்ன அந்த வார்த்தைகள் என்னோடு பேசிய கடைசி நிமிடங்கள் எல்லாமே என் கண் முன்னாள் வந்து பேயாட்டம் போட்டு என்னை உலுக்கிக்கொண்டிருந்தன.

கண்களில் இருந்து கண்ணீர் தடம்புரண்டு ஓட.. உதடுகள் துடிக்க..  உறைந்து நின்ற என்னை சுலக்க்ஷிகாவின் அப்பா ஆதரவாக தோள் தொட்டார். சடாரென தட்டிவிட்டு எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு வேகமாக அவளின் வீட்டைவிட்டு வெளியேறினேன். 

தடுமாறியபடியே வீதியில் நடக்க தொடங்கினேன். என் அருகில் அவள் வந்துகொண்டிருந்தாள். சுயநினைவுகள் அற்று பிரமை பிடித்தவனாக உறவுகள் எதுவும் இல்லா ஒரு நீண்ட  தொலை தூரத்தை நோக்கி என் கால்கள் விரைய தொடங்கின. கண்கள் குளமாகி அவை வீதிகளை மறைத்து கொண்டிருந்தது. ஆனால்..!! நானும் அவளும் வாழப்போகும் அந்த உன்னத வாழ்க்கையை சிலாகித்து பேசியபடியே.. அடிக்கடி என் தோளோடு சாய்ந்து காதல் மொழிகள் பேசியபடியே.. சிறு குழந்தை போல் என் கைவிரல்களை பற்றியபடியே.. இப்போதும் அவள் என்னருகே வந்துகொண்டிருந்தாள்.

                                                       முற்றும்
.........................................................................................................................................
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
...........................................................................................................................................

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...