எப்போதுமே பெண் தேவதைகளால் மட்டும் ஆசிர்வதிக்கப்பட்டவன்
நான். இதுவரைகால என் வாழ்க்கையில் அதிகமாக பெண்களால்தான்
நேசிக்கப்பட்டுள்ளேன் பாதுகாக்கப்பட்டுள்ளேன், அதனால் எனக்கு எப்போதுமே பெண்கள் மேல் தனி மரியாதையுண்டு நாங்கள் யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர்களால்தான் அதிக காயமும் படுவோம் அந்தவகையில் என்னை பல சமயங்களில் காயப்படுத்திய பெருமையும் அதிகமாக பெண்களைத்தான் சேரும். என் மனதை பாதித்த பெண்கள் பலபேர் இருந்தாலும், அதிகமாய் என் மனதை பாதித்த பத்து பெண்கள் இவர்கள்..
சூரியகலா (பள்ளி ஆசிரியர்)
சொந்த இடமான நெடுங்கேணியில் இருந்து அப்பாவின் வேலை மாற்றத்தால் வவுனியா வந்து புது பாடசாலையில் சேர்ந்தபோது எனது வகுப்பின் ஆசிரியராக இருந்தவர், அன்றில் இருந்து நான் ப்ராண்ட்ஸ் வரும்வரை என் வகுப்பாசிரியராகவே தொடர்ந்து வழி நடத்தியவர். அழகானவர், சாந்தமான முகம், அமைதியானவர் அமைதியை விரும்புகிறவரும் எங்கள் தமிழ் ஆசிரியரும் கூட, அவர் பாடம் நடத்தினால் தெளிந்த நீரோடை மெதுவாக ஓடுவதைப்போல அவ்வளவு அமைதியாக அழகாக இருக்கும். நான் தமிழை அதிகம் நேசித்தாலேயோ என்னவோ அவரையும் அதிகமாகவே நேசித்தேன். எனக்கு அவரை
பிடிக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லைத்தான் ஆனால் அவருக்கு என்னைத்தான் பிடிக்கும் என்பது ஆச்சரியம் ப்ளஸ் பெருமை எனக்கு. வகுப்பிலும் மற்ற பாடங்களிலும் நான்தான் முதன்மையானவன் என்று அடித்து சொல்லமுடியாவிட்டாலும் அவர் கற்பித்த தமிழ் பாடத்தில் எப்போதுமே நான்தான் முதல் மாணவன். ஒரு வகுப்பு ஆசிரியர் என்ற வகையில் எங்கள் வகுப்பில் கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் எனக்கே வழங்கி என்னை என் சக மாணவர்களால் பொறமையாய் பார்க்க வைத்தவர். அவர் வகுப்பில் இருக்கும் சமயங்களில் அதிகம் உச்சரிப்பது என் பெயரைத்தான், வகுப்பில் அவர் படிப்பித்துகொண்டிருக்கும் போது திடீரென " துஷியந்தன் மிச்சத்த நீ விளங்கப்படுத்து.." என்று சொல்லி என்னை தன் இடத்தில் வைத்து அழகுபாப்பவர் அதை தன் சக ஆசிரியர்களிடமும் சொல்லி பெருமைப்பட்டுகொள்பவர். எங்கு இலக்கிய போட்டிகள் நடந்தாலும் என்னைக்கேட்காமலே என் பெயரை கொடுத்து நம்பிக்கையுடன் தாய் அன்போடு வழியனுப்பி வைப்பவர், என் பாடசாலையில் உள்ள பல ஆயிரம் மாணவர்களுல் என்னை தனித்து தெரிய வைத்தவர். பாடசாலை அதிபர் தொடங்கி முதலாம் ஆண்டு படிக்கும் சிறு மாணவன் வரை என்னை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவைத்த பெருமைக்கு உரியவர். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என் முதல் சிறுகதை "இடி" வார இதழில் வெளிவந்த போது அந்த பத்திரிகையை தூக்கிக்கொண்டு அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஒவ்வொருவரிடமும் காட்டி காட்டி துஷ்யந்தன் என் மாணவன் என்று பெருமைப்பட்டு அவர் குதுகளித்த அந்த நிமிடங்கள் இப்போதும் என் கண் முன் நிழலாடுகின்றது. பிராண்ட்ஸ் வந்து இத்தனை வருடங்கள் உருண்டோடிவிட்ட பின்னும் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவர் நினைவுகள். நான் படித்த பாடசாலையில் இப்போது படிக்கும் என் சொந்தங்கள் என்னுடன் தொலைபேசியில் பேசும் போது "துஷியந்தன் போல ஒரு மாணவன் எனக்கு இனி எப்போதும் கிடைக்காது என்று சொல்லி உன் சூரியகலா மிஸ் அடிக்கடி பீல் பண்ணுவாங்கடா " என்று சொல்லி என்னை நெகிழ வைத்துவிடுவார்கள். சில நேரங்களில் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்.
கிஷாந்தினி ( முதல் காதல்,முதல் காதலி )
வன்னியில் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நான் நாலாம் வகுப்பு படிக்கும் போது அறிமுகமான குட்டித்தேவதை, ஒரு நாள் ஒரு பாட வேளையில்தான் எங்கள் வகுப்புக்கு தன் தந்தையுடன் வந்தாள் அவள், எங்கள் வகுப்பு ஆசிரியரிடம் பேசிவிட்டு அவர் தந்தை போய் விட அவள் ஒரு வித மிரட்சியுடன் நின்று கொண்டிருந்தாள் எங்கள் வகுப்பறையில், எங்கள் வகுப்பாசிரியர் அவளைப்பற்றி எங்களிடம் அறிமுக படுத்திக்கொண்டிருக்க நான் வைத்தகண் வாங்காமல் அவளை பார்த்துகொண்டிருந்தேன்.. என்ன அழகு அவள் எங்கள் வீட்டில் இருக்கும்
பொம்மை போல அவ்ளோ அழகாக இருந்தால். அவள் ரெம்ப அமைதியானவள் யாரிடமும் சிரித்துபேசி அதிகம் நான் பார்த்தது இல்லை
நன்றாக படிப்பவள். வகுப்பில் முதல் மாணவனாக இருந்த என்னை வந்த ஒரு வருஷத்திலேயே இரண்டாம் இடத்துக்கு தள்ளிய பெருமைக்காரி
ஆனால் யார் என்னை முந்தியது என் நேசத்துக்குரியவள்தானே என்பதில் ஆறுதல் எனக்கு, கணக்கு பாடத்தில் எப்போதும் பின்னால் நிப்பவன் நான்
ஒரு நாள் கணக்கு வாத்தியாரிடம் அவள் முன்னாள் அவமானபட்டதுக்காகவே எங்கே அவள் என்னை மக்கு என்று நினைத்துவிடுவாள் என்பதற்காவே கணக்கு பாடத்தில் தனிக்கவனம் செலுத்தி முதல் ரேங் எடுத்து எல்லோரும் என்னை ஆச்சரியமாய் பார்க்கவைத்தை மாயக்காரி அவள். அவள் மேலான என் பிரியத்தை எந்த எந்த வார்த்தைகள் கொண்டு சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. பரீட்சை நேரங்களில் எங்கள் வகுப்பில் ஒரு மேசையில் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும்தான் அமர்த்துவார்கள் அப்படியான ஒரு சமயத்தில் என் அருகே அவள் வந்து அமர வேண்டும் என்று முருகனுக்கு நேத்தி வைத்து தேங்காய் உடைத்து கூட இருக்குறேன். அன்னம் போல் அவள் அசைந்து அசைந்து வரும் அழகை பார்ப்பதற்காகவே நேரத்தோடு பாடசாலை சென்று காத்திருப்பேன். அவள் மேலானா என் பிரியத்துக்கு யுத்தம் காரணமான இடம்பெயர்வு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போது அவள் எங்கு இருக்கிறாள் ..? எப்படி இருப்பாள்..? அவளுக்கு கல்யாணம் ஆகி இருக்குமா? இப்படி அவளைப்பற்றி அரிக்கும் கேள்விகள் என்னிடம் ஏராளம் இப்பொழுதும். இவை எல்லாத்தையும் விட அவளை நினைக்கும் போதெல்லாம் என் மனம் வாட்டும் வேதனை அவள் அருகில் இருந்த கடந்த அந்த வசந்தகாலங்களில் ஒருநாள் கூட அவளுடன் ஒரு வார்த்தைகூட நான் பேசியது இல்லை என்பதுதான்.
பார்வைகளாலே பேசிக்கொண்டோம்
பார்வைகளாலே அன்பை பரிமாறிக்கொண்டோம்
இறுதியில் - ஒருவொருக்கொருவர்
சொல்லாமலே பிரிந்துவிட்டோம்.
நசீமா ( உயிர் தோழி )
நான் வேலைக்கு போக தொடங்கிய நாட்களில் அறிமுகமானவள். எங்கள்
கணிப்பில் வெள்ளைக்காரி என்றால் இப்படித்தான் இருப்பால்கள் என்ற
இலக்கணத்தை அவளுடன் பழகிய நாட்களில் உடைத்துப்போட்டவள்.
அவள் கன்னத்தில் விழும் கன்னக்குழி மட்டும் அல்ல அவள் நடத்தைகளும் அழகுதான். அவள் அடிக்கடி வெக்கப்படுவது கொள்ளை அழகு பார்த்துக்கொண்டே இருக்கலாம், உரிமையுடன் சண்டை போடுவாள், உரிமையுடன் கோவித்துக்கொள்வாள் நான் பேசாமல் விட்டுவிட்டால் "என் கூட பேசாமல் கூட இருப்பியா நீ" என்று அதற்கும் மறுநாள் சண்டை போடுவாள். துஷி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..?? ஓ.. உங்க வீட்டுல பிரஞ்சுகாரியை கல்யாணம் பண்ணினா கேவலமா உன்னை பாப்பாங்க இல்ல.. என்று அவள் உதடு சுளித்து சொல்லி மிகப்பெரிய நகைச்சுவை சொன்னவளைப்போல் வாய்விட்டு சிரிக்கும் போது அவர்களைப்பற்றி நாம் நினைக்கும் தப்பான கண்ணோட்டத்துக்கு பின்னந்தலையில் சமட்டியால் அடித்தது போல் இருக்கும். இப்போது அவளுக்கும் என் இன்னொரு பிரஞ்சு நண்பன் இஷமுக்கும் இடையில் ஓடும் காதல் குட்டி கைக்ஹூ கவிதை.
இந்த வெளிநாட்டு வாழ்க்கை எனக்கு தந்தது பல கசப்பான அனுபவங்களைத்தான் அதே வெளிநாட்டு வாழ்க்கை தந்த சில பொக்கிஷங்களில் முதன்மையானது அவளும் அவளுடைய நட்பும்.
டிஸ்கி : இப்பதிவில் உறவுக்கார பெண்கள் தவிர்க்கப்பட்டுள்ளது,
நீண்ட பதிவாகி விட்டதால் மிகுதி அடுத்த பதிவில்.