வியாழன், டிசம்பர் 01, 2011

மாத்தியோசி : ஊரில ஹீரோ! வெளிநாட்டில ஸீரோ!


மாத்தியோசி என்ற தலைப்பில் பதிவர்கள் தங்களுக்குள் இன்னொருவரின் தளத்தில் மாற்றி பதிவிடலாமே என்ற அக்ஷ்யம் வலைப்பூவின் சொந்தக்காரர் வரோ அண்ணனின் வித்தியாசமான சிந்தனைக்கு உயிர் கொடுக்க அவருடன் சேர்ந்து நாங்கள் ஜந்து பேர் ஒன்று சேர்ந்து இந்த முயற்சியை செயல் படுத்தி வருகிறோம்.. அந்த வகையில் வரோ அண்ணனின் பதிவு இன்று என் வலைப்பூவில்.... 

வரோ சிறு அறிமுகம்...
லண்டனில் ரிலாக்ஸாக வரோ அண்ணன் .

வரோ அண்ணாவை நான் அறிமுகப்படுத்தித்தான் மற்றவர்கள் அறிய வேண்டும் என்ற தேவையே இல்லை... இவரை வலையுலகில் தெரியாதவர்கள் மிக குறைவே வலைப்பூவில் நீண்டகாலமாய் எழுதும் மூத்த பிரபல  பதிவர்களில் ஒருவர். இப்போது அதிகம் சினிமா&நகைசுவை பதிவுகளே எழுதி வந்தாலும் அதிலும் தன் தனித்திறமையை நிருபித்துக்கொண்டுதான் இருக்கார். இவரின் பழைய பதிவுகள் இவரின் மிக  சிறந்த எழுத்துக்கு சான்று.. இப்போது அதிகம் சினிமா&நகைச்சுவை பதிவுகள் எழுத காரணம் தன் நேரமின்மையே என்று சொல்லும் இவரின் பேச்சில் மட்டும் அல்ல எழுத்திலும் சொல்ல வந்த விடயத்தை சுத்தி வளைக்காமல் சுருக்கமாக அழுத்தமாக வெளிப்படையா சொல்லும் முறை இவரிடம் என்னை அதிகம் கவர்ந்தது. இப்போது இவர் எழுதி வரும் சங்கிலி மன்னனின் வரலாற்று தொடர் இவரில் சிறந்த எழுத்துக்கு நல்ல உதாரணம் (இத்தொடருக்கான லிங்க் என் தளத்திலேயே மேலே கொடுத்துள்ளேன்..) சங்கிலிய மன்னனின் வரலாற்று உண்மைகளுடன் சில கற்பனை கதாபாத்திரங்களையும் உருவாக்கி இவர் எழுதுவது தனிச்சிறப்பு.. சாண்டில்யனின் எழுத்தில் இருக்கும் சுவராசியமும் ஈர்ப்பும் விறுவிறுப்பும் இவரின் இத்தொடரில் கொட்டிகிடைப்பது 
இன்ப ஆச்சரியம். இனி அவரின் பதிவு...

ஊரில ஹீரோ! வெளிநாட்டில ஸீரோ!


குந்த வசதிகளும் வாய்ப்புக்களும் இருந்தால், தாங்குவதற்கு சொந்தங்கள் இருந்தால், தனிமையைப் போக்க எம்மைச் சுற்றி உறவுகள் இருந்தால் வெளிநாடு என்பது சொர்க்கபுரி தான். இவற்றில் ஏதாவது ஒன்றாவது இருந்தால் கூட வெளிநாட்டு வாழ்க்கையைத் தாக்குப்பிடித்து விடலாம். இவை எதுவுமே இல்லாத ஒருவனின் வாழ்க்கை வெளிநாடுகளில் பாலைவன பூமி போன்றது. இங்கு மருந்துக்கு கூட ஒரு மழைத்துளியை எதிர்பார்க்க முடியாது.

அவ்வாறான ஒரு நரகத்தில் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். இது விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்வு. அதனால் யார் மீதும் குறைப்பட என்னால் முடியாது. 

வெளிநாட்டு வாழ்க்கை சவாலானதாக இருக்கும் என எனக்கு தெரியும். ஆனால் இவ்வளவு கரடுமுரடாக இருக்கும் என நான் நினைத்திருக்கவில்லை. திரும்பும் பக்கமெல்லாம் சுயநலவாதிகள், கொள்ளையர்கள், காட்டுமிராண்டிகள். இவர்களில் எம்மவர்களும் பலர் இருக்கிறார்கள் என்பது தான் வருத்தப்படவேண்டிய விடயம். 

'ஏன் ஊரில் இவர்கள் ஒருவரும் இல்லையா?' என நீங்கள் கேள்வி எழுப்பலாம். அங்கு இருப்பவர்களையும், இங்கு இருப்பவர்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்த்துவிட முடியாது. காரணம் என்னைப் போலவே இவர்களும் ஐந்தோ, பத்தோ, பதினைந்தோ வருடத்திற்கு முதல் இங்கெல்லாம் வந்து குடியேறியிருப்பார்கள். இவர்கள் நான் அனுபவித்ததை விட பல மடங்கு கஸ்டத்தை அனுபவித்திருப்பார்கள். இன்று ஓரளவாவது நல்ல நிலையில் இருக்கும் அவர்கள் புதிதாக புலம்பெயர்ந்து வரும் எம் உறவுகளை கொஞ்சமாவது மனச்சாட்சியுடன் நடத்தலாமே என்பதே எனது ஆதங்கள்.

பல்கலைக்கழகங்களில், தாங்கள் சீனியரிடம் வாங்கிய ராக்கிங்கை அடுத்து வரும் ஜூனியர்களுக்கு கொடுப்பது போல இவர்களும் புதியவர்களை மிக மிக கஸ்டப்படுத்துகிறார்கள். 

நான் கூறும் விடயங்கள் எல்லாம் 'என் புலம்பல்கள்' என நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. என்னைப் போல நூற்றுக்கணக்கில் ஸ்ருண்ட் விஸாவில் லண்டனில் தங்கியிருக்கும் மாணவர்களின் புலம்பல் இது. நான் படிக்கும் கல்லூரியில் இலங்கையர்களும் பாகிஸ்தானியர்களுமே அதிகம். ஏறத்தாள 200 இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மாணவர்கள் இக்கல்லூரிக்கு இந்த வருடம் வந்திருக்கிறார்கள். அவர்களில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து படிக்க வருகிறார்கள். (ஏனையவர்கள் எஸ்கேப்..) அவர்கள் ஒவ்வொருவரும் லண்டனின் பல்வேறு பிரதேசங்களிலும் வசிக்கிறார்கள். அவர்கள் அனுபவங்களை கூறும்போது அவற்றைக் கேட்டு அவர்களின் பிரதிநிதியாகவே என் கருத்தை முன் வைக்கின்றேன். 

வெளிநாடுகளில் படிக்கும் எண்ணத்தில் வந்தாலோ அல்லது உழைக்கும் எண்ணத்தில் வந்தாலோ முதலில் தேவைப்படுவது பணம். லண்டனில் சராசரியாக 300 பவுண்களாவது மாத  வாழ்க்கைக்கு தேவைப்படுகின்றது. (ஏறத்தாள 56ஆயிரம் இலங்கை ரூபாய்). இதில் படிப்பு செலவையும் கட்டவேண்டும் என்றால் மாதம் ஆயிரம் பவுண்களாவது தேவைப்படும். அதிகாரபூர்வ வேலை செய்யும் பத்து, இருபது மணித்தியாலங்களில் இவற்றை ஒரு மாணவனால் உழைத்துக் கொள்ள முடியுமா?

அதனால் களவாக வேலைசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இங்கு அதிகளவில் எல்லோருக்குமே உண்டு. சரி! வேலைக்கு எங்கு போவது? தெரிந்தவர்களிடம் தானே வேலை கேட்கலாம்..

இங்கே அதிகளவில் தமிழர்கள் கடை வைத்திருக்கிறார்கள். 'ஓவ் லைசன்ஸ்' என்ற அடையாளத்துடன் பெரும்பாலும் குடி வகைகளே அதிகமாக விற்கப்படும். இங்கு அதை விடுத்தால் பிஸ்னஸ் செய்வது மிகவும் கடினம். அவ்வாறான இடங்களில் தேடிப்பிடித்து தெரிந்தவர்கள் மூலம் வேலையைப் பெற்றால் அதிகளவான எல்லா முதலாளிகளும் ஒரே மாதிரியே ஊழியர்களை நடத்துகிறார்கள். (நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்)

லண்டனில் அங்கீகரிக்கப்பட்ட மணித்தியால சம்பளம் 6.13 பவுண்கள். தமிழ்க்கடைகளில் அவ்வளவு கொடுக்க முடியாது என்பது எங்களுக்கும் தெரியும். அதை எதிர்பார்க்கும் மடையர்களும் நாங்கள் இல்லை. ஆனால் ஆகக் குறைந்த கொடுப்பனவாக 4 பவுண்களையாவது கொடுக்கலாமே! இங்கிருப்பவர்களில் சில முதலாளிகள் இரண்டு பவுண்களில் இருந்து ஸ்டார்ட் பண்ணுவார்கள். அவர்கள் நான்கு பவுண்கள் ஆக்குவதற்குள் எங்களுக்கு விஸா முடிந்துவிடும். லண்டன் வந்தற்கு என்ன சாம்பாதித்தாய் என்றால்.. கடன் தான் அதிகமாக இருக்கும்.

எங்கள் உழைப்பைச் சுரண்டுகிறார்கள். அவர்கள் கடையிலும் பிஸ்னஸ் நன்றாகவே நடக்கின்றது. (சுமாரத் தன்னும் இருக்கும்). மனச்சாட்சியுடனாவது ஏற்றுக்கொள்ளக் கூடிய சம்பளத்தைத் தரலாமே! தரமாட்டார்கள். ஏனெனில் நாங்கள் களவாக வேலை செய்கின்றோம். எங்களை நன்றாக பயன்படுத்துகிறார்கள். சரி! சம்பளத்தைத் தான் பொறுத்துப் போனாலும் சங்கடத்தையாவது தராமல் இருக்கலாமே. செய்யும் வேலையில் ஆயிரம் குறைகளை தினமும் அடுக்கிக் கொண்டே போவது. ஏறக்குறைய அடிமைகளைப் போலவே நடத்துகிறார்கள். அவர்களை மனதில் கொண்டே நான் இந்தப் பதிவை முன்னர் எழுதியிந்தேன். லண்டனில் வேலை கிடைப்பது என்பதே திண்டாட்டம் தான். அதனால் கிடைத்த வேலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எல்லாவற்றையும் சகித்துப் போகவேண்டியதாக இருக்கின்றது.

நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஸ்டங்களை விட பலமடங்கு கஸ்டங்களை தமிழர்கள் மாத்திரமின்றி பல நாட்டவர்களும் அனுபவத்துக் கொண்டிருக்கின்றார்கள். குறுகிய வழியில் பணக்காரர்கள் ஆன இந்த பைத்தியம் பிடித்த முதலாளிகள் திருந்தும் வரை இவ்வாறன சம்பங்கள் வெளிநாடுகளில் குறிப்பாக லண்டனில் குறையாது. பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பது எனக்கும் தெரியும். ஆனால் இவர்கள் பாதாளத்துக்கு பணத்தை கொண்டு செல்லத் தேவையில்லை தாங்கள் இறக்கும் போது தங்களுடன் எடுத்துச் சென்றார்கள் ஆனால் அவர்களுக்காக என் உயிரையும் நான் கொடுக்க தயார்.

நண்பர்களே! ஊரில் ஹீரோவாக சுற்றித்திரியும் நீங்கள் வெளிநாடுகளுக்கு தேவையில்லாமல் வந்து ஸீரோ ஆகாதீர்கள்! இது அனுபவித்தவனின் கருத்து.

வரோ அண்ணனின் தளம்http://shayan2613.blogspot.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...