ஞாயிறு, ஜனவரி 08, 2012

கண்ணம்மா+கவிதை+விமர்சனம். ஒரு விளக்கம்.. சிறு பிரிவு..

வணக்கம் நண்பர்களே..
முடிந்த எனது "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.." தொடரை அப்படியே கவிதையாக வடித்து மகேந்திரன் அண்ணா அனுப்பி இருந்தார். அதேபோல்.. நேசன் அண்ணா தொடர் பற்றிய ஒரு நடுநிலையான சிறப்பான விமர்சனம் ஒன்றை எழுதி அனுப்பி இருந்தார். அவர்களுக்கு என் அன்பை சொல்லிக்கொண்டு இன்று அவற்றை பார்ப்போமா..?

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.. - கவிதை.
வானவூர்தி ஏறிப்போய் 
வான்வளர்ந்த நாடெல்லாம்
வக்கனையா ஆர்ணிகன் நான்
வாகாக சுற்றி வந்தேன்!

கருசுமந்த நாட்டுக்கு
கனவோடு வருகையிலே
காட்டாறு போல் நெஞ்சு
கரைபுரண்டு ஓடுதய்யா!!

பெத்தவங்க அருகிருந்தும்
பொல்லாத எம்மனசு
பொற்கிளி அவளோட
பூமுகத்தை தேடுதய்யா!!
சுத்தமான இரத்தத்தை
சுத்திகரிக்கும் காற்றுகூட
சுவாசத்தை மறந்துபுட்டு
சுலக்ஷிகாவை  நாடுதய்யா!!
*** *** ***
வளமான வன்னியப்பா
அதிலொரு நெடுங்கேணியப்பா!
அப்பா பிறந்த ஊருன்னு
அப்பம்மாவை பார்க்கப் போனேன்!!

என்னைப்பாத்த போது
எங்கப்பாவைப் போலன்னு!
காமாட்சி அப்பம்மா
உச்சிமோந்து பார்த்தாரே!!
ஊர்சுத்தி பார்த்தாலும்
ஊஞ்சலாடி வந்தாலும்!
ஊமையான எம்மனசு
என்னவளைத் தேடியதே!!

பால்நிலா தவறிவந்து
பால்கனியில் விழுந்ததய்யா!
பாவையந்த சுலக்ஷிகாவோ
பார்வையிலே விழுந்தாளே!!
*** *** ***
வந்துபோன தேவதையை
வாசலிலே தேடிநின்றேன்!
வந்தசுவடு தெரியவில்லை
வாடிமனசு போச்சுதய்யா!!
நொந்துபோன மனத்தோட
நொடிப்பொழுது சுற்றிவர!
சலசலக்கும் கம்மாக்கரையில்
காலாற நடந்துவந்தேன்!!

வரைந்துவைச்ச சித்திரம்போல்
பாவையங்கு வந்தாளே!
கண்காண நினைச்சிருந்த
தரிசனம் கிடைத்ததய்யா!!
பொன்னெழில் கொண்டவளோ
கண்மருண்டு விழித்தாளே!
என்னைக்கண்ட மறுகணமே 
துள்ளிச்சென்று போனாளே!!
சித்திரத்தை மறுபடியும் 
நித்தமும் நான் கண்டிடவே!
பொத்திவைச்சேன் ஆசைகளை 
முத்துப்போல என்நெஞ்சில்!!
*** *** ***
காத்திருந்தேன் கொக்குபோல
பூத்துவந்த பூவைக்காண!
சந்தர்ப்பம் வைத்ததுமே
உதிர்த்துவிட்டேன் சொல்சிறகை!!
உள்ளுக்குள்ளே ஆசைதனை 
நெக்குருக்கி வைத்தவள்!
கடகட கட்டைவண்டிபோல் 
கலகலத்து பேசக்கண்டேன்!!

பேச்சிலொரு புன்னகை
விழியிலொரு அபிநயமாய்!
வாய்மொழிந்த வார்த்தையதோ 
உணர்விழந்து இருந்ததய்யா!!
எழில்வண்ணப் பாவையவள்
ஏனிந்த உணர்வளித்தால்  
ஏழ்மையின் பாதிப்பாலோ? 
எனக்கது புரியவில்லை!!
வடிவான பாவையவள் 
வறுமையின் காரணத்தால்!
வழிந்துவரும் உணர்ச்சிக்கும் 
மதகு போட்டு தடுத்தாளே!!
*** *** ***
எட்டூரு வெடிக்கும் சத்தம்
என்காது எட்டியதே!
இழவேதும் விழுந்துருச்சோன்னு
படக்குன்னு எழுந்திருச்சேன்!!
கன்னியவள் அன்னையோட 
கதறல் அந்த சத்தமின்னு!
தெருவுக்கு வந்ததுமே 
தெளிவாக புரிந்ததய்யா!!
பாவிப்பய அவ அப்பனவன் 
பண்பாடு தெரியாது!

பட்டத்தண்ணி அடிச்சவன்போல்
பாவையவள் அம்மாவை
பச்சாதாபம் பாராமல்
தெருவிலே இழுத்துவந்து
பேயாட்டம் அடித்திருந்தான்!!
பணம் என்னும் ஓர் பிணமே
குணமாக ஆகாது!
பணமில்லாமல் போனதால்
குணமிழந்து போனாயோ?!
பணம் மட்டும் காரணியல்ல
பாழாய்ப்போன வாழ்க்கையிலே!
இயலாது போனதால்
இயைபிழந்து போனாயோ?!! 

திரும்பி நீயும் பாரப்பா
நீ பெற்ற பிள்ளைகளை!
செய்வதெனத் தெரியாது
சுவரொட்டி ஆனாரய்யா!
கனகமணிப்  பெண்ணவளை
கலங்க நீயும் வச்சிட்டியே!
கண்மணி கலங்கினாலோ
என்மனசு பொருக்குமாய்யா!!
கலங்காதே கண்மணியே
காலமெல்லாம் நானிருக்கேன்!
வீட்டுப்படி கடந்துவிடு
என்னோடு இணைந்துவிடு!!
*** *** ***
கண்களிலே கண்ணீர் ஏனடி..
காத்திருக்கேன் நானடி!
காலமிங்கே பதில் சொல்லும்
காதலை நீ ஏத்துக்கோ
கலங்காது பார்த்துக்கிறேன்!!
காமத்தில் விளையவில்லை
கடும் மோகத்தில் விளையவில்லை
உன் முக பாவத்தில் விளைந்ததடி
உன்னோடு நானிருப்பேன் என்கிறேன்
நீயோ என்னை விட்டு போவாய் என்கிறாய்..

உன்னைவிட்டுப் போனாலும்
உன் நெஞ்சை விட்டுப் போவதில்லை ..
பதில் சொல்லடி கண்மணியே!!
அன்பான ஆர்ணிகனே
ஆசையுள்ள மன்னவனே!
மயங்காது சொல்றேன்யா
மங்காத வைரம் நீ!

என்னப்பனாத்தா படுந்துயரம்
உனக்கிங்கே புதியதாய்யா!
அவுகளை விட்டுபுட்டு
உன்கூட ஓடிவந்தா
ஊர் என்ன தூற்றாதாய்யா!
மன்னிச்சிவிடு மன்னவனே
மண்குதிரை நானய்யா!!
*** *** ***
ஏகபோக வாழ்க்கைய
ஏற்றத்தோட வாழ்ந்தவன் நீ!
என்னைய கட்டிக்கிட்டு
ஏழ்மையாக வேண்டய்யா!
தோளோட தோளுரசி
தெம்மாங்குப் பாட்டுப்பாடி!
உப்புமூட்டை நீ தூக்க
நெடுந்தூரம் போயிடவே
மனசுக்குள்ள கனவுதாய்யா!!

எனக்காக உன்னிலையை
இறக்கிடவே மனமில்லை!
இன்னொருத்திக்கு விட்டுத்தர
எனக்கிங்கே சம்மதமில்லை!!
அடைமழை பெஞ்சதுவே
அடிமின்னல் அடித்ததுவே!
கனத்த இடியது
இனிப்பாக இடித்ததுமே
மாந்தளிர் மேனியவள்
எனைக்கட்டிக் கொண்டாளே!!
*** *** ***
கொளுந்துவிட்டு எரியுதடி
கூட்டிவைச்ச உணர்ச்சியெல்லாம்- ஞானத்தங்கமே
என்னுடல் உரசிப்போகவில்லை
உயிர் உரசிப்போகிறாயே - ஞானத்தங்கமே!!!
உரசிவிட்டுப் போனபின்னே
உன்னைநானும் பார்க்கவில்லை!
கனத்த கூட்டமொன்று
உன்வீட்டின் முன்னிற்க
உணர்விழந்து போனேனடி!!

என்னவென்று தெரியவில்லை
ஏதென்று புரியவில்லை
என் மனசு துடிக்குதடி
ஏங்கித் தவிக்குதடி!
கூட்டமிதை பார்த்தபின்னே
மனசு கூடுவிட்டு பாய்ந்துவந்து
நாடுதடி உன்னுருவை!!

எமகாதக அப்பனவன்
திரும்பப் பேய் பிடிச்சிப்போய்
சதிராட்டம் ஆடினானே!
அவன் கை உன்மேலே படுமுன்னே
பாய்ந்து பிடித்தேனே!!
என் தோள் சாய்ந்துவிட்டாய்
ஆதரவு தேடி நின்றாய்!

எனைக்கட்டி போய்விடுன்னு
விழிநீர் உதிர்த்து நின்றாய்!!
புளியந்தோப்பு குயிலோன்னு
குக்கூன்னு கூவிருச்சி!
சாறெடுத்த கரும்புபோல
சக்கையான எம்மனசு!
நீர்ச்சத்து ஏறிப்போச்சு
நீலக்குயில் உன்மொழியால்!!

திடீரென்று ஒர்கரம்
எனை இழுக்கக் கண்டேனே!
என்னப்பா கையதுன்னு 
திரும்பியதும் தெரிஞ்சதுவே!
வாடா பொறத்தாலன்னு
இழுத்துச்சென்று போகையிலே 
என்னுயிர் போனதுபோல் 
உயிரிழந்து நின்றேனே!!
*** *** ***
வானிடிந்து போனதுபோல் 
வாழ்விழந்து நின்றேனே!
பெத்தவங்க பேச்சுக்களை 
புறந்தள்ள முடியாம
வெளிநாடு வந்தேனே!!
உடல்மட்டும் தானிங்கே 
உயிரில்லை கண்மணியே!
உயிராக நீ எப்போ
எனைச் சேர வருவாயோ!!

காமாட்சி அப்பம்மா 
தளர்ந்து போனாங்கன்னு!
இடிபோல ஒரு செய்தி 
தந்திமூலம் வந்ததய்யா!!
பதிப்பதற்கு பதிலாக
மனம் குதூகலித்துப் போனதய்யா!
மாங்குயிலே உனைக்கான
மறுபடி சந்தர்ப்பமோ?!!
*** *** ***
நெஞ்சமதில் மஞ்சமிட்டு 
பஞ்சனை கொண்டவளை!
கொஞ்சமேனும் பார்த்திடவே 
சஞ்சலம் கொண்டேனே!!


படுத்திருந்த அப்பம்மா 
படக்குன்னு எழுந்துவிட்டார்!
என்னைப் பார்க்கவே 
காத்திருந்தது போல!!

வீடெல்லாம் மகிழ்ச்சியாய்
சாம்பிராணி வாசனையாய்
பரவிக் கிடக்க - என் 
மனம் மட்டும் 
விட்டில் பூச்சியாய் 
சிறகொடிந்து நின்றது!!

குற்றம் செய்த என்மனம் 
குறுகுறுத்து நின்றது!
கோலமகள் அவளைக்காண
படபடத்து நின்றது!!

ஆவலை அடக்காது 
நடைபோட்டேன் அவள் அகத்திற்கு!
பேய்பிடித்த அப்பனவன் 
சாதுவனாய் சாய்ந்திருந்தான்!
சிறுகுணம் கொண்ட அந்த 
மனிதப்பதரை புறந்தள்ளி 
என் நாயகியின் தடம் தேடினேன்!!

பொலபொலத்தான் கண்ணீரை 
பொல்லாத அப்பனவன்!
போய்ப்பாரு என்றானே 
போக்கத்த மனிதனவன்!!

திக்கித்துப் போனேன் 
திசைகண்ட போதங்கே!
எழிலான என்னவளோ 
நிழற்படமாய் போனாளே!!

தென்பாண்டி திரவியமே 
தெள்ளுதமிழ் கவிமலரே!
போன இடம் ஏதடியோ?!!
சொல்லாமல் போனாயே!!

வார்த்தையொன்னு சொல்லியிருந்தால் 
வாடிப்போகுமுன்னே வாசமலர் தந்திருப்பேன்!
ஏமாத்தி போனானென்று 
எனை விட்டுப் போனாயோ?!!

தவறி விட்டாயடி - அடி கண்ணம்மா 
வார்த்தை தவறி விட்டாயடி!
உன்னுயிரை எங்குவிட்டாய்
சொல்லிவிடடி 
அங்கே நான் தகனம் ஆகிறேன்!!!!

அன்பன்-: "வசந்த மண்டபம்" மகேந்திரன்.
மகேந்திரன் தளம்.


வார்த்தை தவறி விட்டாய்.. - விமர்சனம். 
னி உலக இலக்கியத்திற்குத் தமிழீழ இலக்கியங்கள் தான் தலமை தாங்கும் என்று கூறிய எஸ்.பொ(எஸ்.பொன்னுத்துரை), செ.யோகநாதன் போன்றோரின் கூற்றுக்கள் சிற்றிதழ்களிலும் வாரசஞ்சிகைகளிலும் விவாதமாக நீண்டு சென்று ஊறுதியாகும் நாள் தொலைவில் இல்லை என்பதைப் போல், இலவசமான கூகுள் வலைப்பூ ஊடாக பல ஈழத்து பதிவாளர்களும் அந்த கூற்றினை உறுதியாக்கும் வண்ணம் தம் வாழ்வின் சில அனுபவங்களை காத்திரமான தொடராக இனையம் மூலம் நம் இமைக்குள் வீழ்த்தி இதயப் பரப்பெல்லாம் இன்பம் பொங்கும் உணர்ச்சிக்குவியலாக படைத்து வருகின்றார்கள்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக ஒரு வாசகனாக, ஒரு வலைப்பூவில் அதிகமாக வாசல் ஓரம் காத்திருக்கும் வாயில் காவலன் போல் காத்திருந்தது, 'வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா' என்ற தொடரினைத் தாங்கிவரும் கற்றது தமிழ் வலைப்பூவில்,  தொடர்களுக்கு உரிய அங்கிகாரம் கிடையாது என்பதை ஆரம்பத்திலேயே அறிவித்துக் கொண்டு வந்த ஆசிரியர் அவர்களின் நம்பிக்கையில் 'காத்திரமான எவையும் வாசிப்பு உலகில் வரவேற்கப்படும்'  என்பதற்கு சாட்சியாகப் போன தொடர் இது. 

ஈழத்து மூத்த தலைமுறையினர் யுத்தம் என்ற கொடிய புயலில் சிக்கி அகதியாக வெளியேறி ஏதிலிகளாக வலம் வரும் இன்றைய நிலையிலும், தாயக நினைவுகள் தலைக்கவசமாக எண்ணத்தில் இருக்கும் உணர்வுகளினால் தந்தையின் வற்புறுத்தலில் விருப்பம் இன்றி இலங்கையில் வேர்களைத் தேடிய விழுதுகள் போல் வன்னி மண்ணை மிதிக்கும் அடுத்த தலைமுறைத் தனயனான ஆர்ணிகன் என்ற பாத்திரம் மூலம் நெடுங்கேணி மண்ணில் கதைக்களம் பயனிப்பதன் ஊடாக, அருமையான மொழியாளுமையுடன் இலக்கிய வர்ணனைகள் தங்க முலாம் பூச, புலம் பெயர்தவன் வாரிசு ஆர்ணிகனின் கண்டதும் பார்வை கொண்டதுமான புலத்து மங்கை சுலக்சிஹாவின் மீது அனுதாபத்தினால் வந்த விடலைப்பருவக் காதல் வலியை, கடந்த சில வாரங்களாக ஆர்ணிகன் தன் அப்பம்மா வீட்டிற்குப் போவதன் ஊடாக பயணத்தை தொடங்கி, அங்கே கண்டதும் காதல் என விழியில் மழைக்கு வீட்டுக் கோடியில் ஒதுங்கிய ஏழைக்குமாரி இவன் மனதிற்குள் வந்து கோட்டைராணி ஆவாளா சுலக்சிகா என்ற அனுதாபக் காதலையும் சுவாரசியமாக பயணிக்க வைத்த ஆசிரியர் துசியந்தன் அவர்களைப் பாராட்ட வேண்டும்!

இனிய தித்திக்கும் தமிழ் மொழியில் அழகு உவமை அணிகள் ஆபரணம் பூட்டி தொடரினை காதல் ரசம் பொங்கும் கோர்வையாக்கி இருக்கின்றார் . உவமையில் இவரின் எழுத்து நடையை மெச்சுவது என்றால் சுலக்சிஹாவை வர்ணிக்கும் இடத்தில் காதல் கரைபுரண்டு ஒடுவதை நோக்கும் வரிகள் தான். இதிலும் புதுமை எழுத்துலகில் 'திருக்குறளைப் போல் சிக்கனமான உதடுகள்' என்ற உவமையணி ஒப்பீடு உச்சம். இதுபோல் பல இடங்களில் தன் புலமையை இயற்கையின் அழகை வர்ணிப்பதிலும், மனதில் கிராமத்து எழிலையும் படம் பிடித்துக் காட்டும் இடங்களில் கதையின் போக்கு அசைக்கமுடியாத நினைவுகளை மீட்டுகின்றது. சுலக்சிஹாவின் வறுமை நிலை, வீட்டின் வர்ணிப்பு, காதலில் அவளின் கேள்விக் கணைகள் அதிலும் நங்கையின் சொல்லாடல் 'மண்குதிரை' என்ற விழிப்பு ஒரு செதுக்கல்! இத்தனை வியப்புக்களையும் தாண்டி ஆர்ணிகன் சுலக்சிஹா காதல் புலத்துக்கும் புலம் பெயர் உறவுக்கும் இடையில் ஒரு உறவுப்பாலமாக வந்து சென்றது சமுகத்தின் பார்வையில் சுலக்சிஹா என்ற மங்கையின் நாட்டுப் பற்றும், வறுமையிலும் விடியலைத் தேடும் ஏழைக்குடும்பத்தின் எதிர்பார்ப்புக்களை சுமந்து சென்று ஒரங்க நாடகம் போல இந்த தொடர் மனதில் சலனத்தை விட்டுச் செல்கின்றது.

ஆர்ணிகன் காதல் ஒரு அனுதாபக் காதல் என்பதே இந்தத் தொடரின் முடிவாகிப் போனது. தந்தையின் பிடிவாதத்தால் பிரென்ஸ்சு தேசம் வருவதும் காலமாற்றத்தின் இடைவெளியில் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு பாட்டியின் சுகயீனம் காரணமாக வழிகிடைக்கும் போது மீண்டும் சுலக்சிஹாவை சந்திக்கும் ஆவலில் சென்றால், அங்கே அவளின் உயிர் பிரிவும் அதன் ஊடே அவள் எண்ணங்களின் ஊடே காதலி ஒரு குழந்தை போல் கைவிரல்பிடித்து நினைவுகளோடு வாழ்க்கை பூராவும் பயணிப்பாள் என்று சொல்லி கதையை முடித்த விதம் சிறப்பு!

தொடரில் சில குறைகளையும் சுட்டிக் காட்டுவது ஒரு வாசகனின் கடமை அல்லவா? முதலில் கதை ஏனோ தானோ என்று பயணித்தது சுலக்சிஹாவின் வரவின் பின் தொடர் மிகவும் சுவாரசியமாகப் பயணித்தாலும், புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் போது தந்தையின் தாயின் எண்ணங்களையும் பதியம் போட்டு இருக்கலாம். முதல் முதலாக தாயகம் போகும் தனையன் பாத்திரம் நேரடியாக வன்னிக்களத்தில் இருந்து பயணிப்பது சினிமாத் தன்மை போல இருக்கு. விமான நிலையத்தில் இருந்து தொடங்கினால் இன்னும் தொடரினை நீண்டதாக செய்து இருக்கலாம் என்றாலும் ஆசிரியர் முதல் தொடர் என்பதால் விட்டு விடலாம். பிரான்ஸ் தேசத்தில் இருந்து செல்லும் பிரெஞ்சில் பிறந்து, படித்து ,பிரென்ஸ் குடியுரிமை உள்ள தனையன் இத்தனை தூரம் தமிழில் சுலக்சிஹாவுடன் சம்பாஸனை செய்யும் இடம் மொழியை நேசிக்கும் ஒருவன் என்றாலும் இயல்பாக வரும் பிரென்ஸ் மொழியை பாவிக்காமல் இருப்பது சாத்தியமா என்று சிந்திக்கவைக்கின்றது.

அன்னிய தேசத்தில் இருந்து வரும் ஆடவனுடன் கிராமத்து மங்கை சுலக்சிஹா இப்படி மனம் விட்டு அதிகம் பேசும் சுழல் அந்த இடத்தில் சாத்தியமா என்றால்.... ஆசிரியர் சினேஹாவின் சிரிப்பூ( பூ) காதில் வைக்கின்றார். உங்க நாடு எங்க நாடு என்று பிரித்துப் பேசும் ஆர்ணிகன் அத்தனை தூரம் போயும் தாய் மண்ணில் அன்னியமாக இருக்கும் தன்மையை ஏன் கொண்டுவந்தார் என்பதை கொஞ்சம் விளக்கி இருக்கலாம். ஏழைக்குமாரியை விரும்பும் புலம் பெயர் வாலிபனின் கேள்வியில் சுலக்சிஹாவின் படிப்பையும் கொஞ்சம் அலசி இருக்கலாம்! குடும்பத்தில் நிகழும் சண்டையின் ஊடே தந்தையின் இயலாமையின் சமூகக்காரணியையும் அலசி இருக்கலாம்! பாரதியின் கண்ணம்மாவும் கண்ணதாசனின் வார்த்தை தவறிவிட்டாயும் கடன் வாங்கியது தலைப்புக்கு பஞ்சமோ என ஐயம் என்றாலும் சுவையையான காதல் தொடரினை தந்த நண்பனுக்கு தனிமரத்தின் சிறப்பு வாழ்த்துக்கள்.

தொடரில் பலரும் சொல்லியது பந்தி பிரிக்கவில்லை என்பது!   புலம் பெயர் வாழ்க்கையிலும், தேடலிலும் நேரம் இன்மை என்பது ஒரு முக்கிய பிரச்சனை. துஷியும் இதற்க்கு விதிவிலக்கு இல்லை என்பதை நானும் ஆமோதிக்கின்றேன். ஆர்வத்தில் எழுதும் போது ஒதுக்கும் நேரமே எங்களின் இமையை மூடும் நேரத்தில் துண்டு விழும். இதையும் புரிந்து கொள்ளுங்கள் உறவுகளே! 

தொடரில் முடிவை இப்படி முடித்திருப்பது சோகம். சுலக்சிஹா படத்தில் பூமாலை போடப்பட்டத்தன் பின் புலம் என்ன? ஒருவேளை தற்கொலை செய்துகொண்டாளா?அல்லது நாட்டின் போர்ச்சூழலில் போராளியாகி மரணத்தைத் தழுவினாளா? என்பதை கொஞ்சம் விளக்கியிருந்தால் இந்த தொடர் ஒரு நாவல் ஆகும் வாய்ப்பு இருந்திருக்கும். தாய்,தந்தை ,அப்பம்மா மற்றும் சுலக்சிஹா குடும்பத்தின் நினைவலைகளை அதிகரித்தால் இன்னொரு காவியம்!

 'வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா!' தொடரின் அழகிய காட்சி படத்தை தந்த கந்தசாமிக்கு ஒரு நன்றி! இந்த தொடருக்கு என்பார்வையைச் சொல்ல வாய்ப்புத் தந்த தம்பி ராசுக்கு விசேட நன்றி! இப்படியான காத்திரமான பல தொடர்களை துஷ்யந்தன் வலைப்பூவில் தொடர்ந்தும் மாலை ஆக்கனும் என்று வேண்டி விடைப்பெறும்
வாசகன்-: "தனிமரம்" நேசன்.
நேசன் தளம்

சில மாத இடைவெளிகளுக்கு பின் மீண்டும் சந்திப்போம்...
அன்புடன்-: துஷ்யந்தன்

20 கருத்துகள்:

  1. வணக்கம் துஸி,
    அடோய் உனக்கு என்ன கலியாணமோ?
    அதென்ன சில மாத இடைவெளிக்குப் பின்னர் சந்திக்கிறது;-)))

    பதிலளிநீக்கு
  2. மகேந்திரன் அண்ணரின் கவிதை, அப்படியே கிராமத்திற்கு எம்மை அழைத்துச் செல்கிறது. கிராமத்து மொழி நடையில் அழகுற, முழுப் பதிவின் கருத்துக்களையும் உள்ளடக்கியிருக்கிறார்.
    கவிதை இங்கே அழகிய விமர்சனமாய் மலர்ந்திருக்கிறது.

    தனிமரம் அண்ணர் விமர்சனத்தில் கொடுத்த சொல் அலங்காரங்களின் அளவிற்கு பதிவினை அலசலத் தவறி விட்டார். பதிவின் நிறைகளைப் பற்றி இன்னமும் நிறையவே அலசியிருக்கலாம். அதுவும் அந்த கிணற்றடியில் தண்ணீர் அள்ள சுலக்‌ஷனா வர துஸி நெளிய...ஹே...ஹே..
    சாரி ஆர்ணிகன் நெளிய துஸி கொடுத்த வர்ணனை இருக்கிறதே...
    இப்பவும் என் கண்ணினுள் நிற்கிறது.

    தனிமரத்தின் விமர்சனத்தில் உள்ள எழுத்துப் பிழைகளை பதிப்பாசிரியர் என்ற ரீதியில் துஸி திருத்தி விமர்சனத்தினை அழகுற வடிவமைத்திருக்கலாம்.
    தவற விட்டு விட்டீங்க. அதே போல அச்சிலேற்றும் சந்தர்ப்பம் வந்தால், விமர்சனத்தில் உள்ள சில வழுக்களை திருத்துவீங்க என்று நினைக்கிறேன்.
    அடுத்தது சம்பந்தமே இல்லாம விமர்சனத்தில் அநேக இடங்களில்! ! ! என்று ஆச்சரிய்க் குறி போடுவதனை நிறுத்துங்க! எல்லா இடங்களிலும் காரணமின்றி வரும் போது அண்ணர் ஐயத்துடன் எழுதினாரோ என்று படிப்போர் சிலர் தவறாக நினைக்க கூடும்.

    பதிலளிநீக்கு
  3. மகேந்திரன் அண்ணர்,
    தனிமரம் அண்ணர்
    துஸி ஆகியோருக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!

    தொடரட்டும் உங்கள் பணி!

    பதிலளிநீக்கு
  4. சும்மா மூன்று மாதம் லீவெடுக்காது உடனே வா....

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் துஷி!கவிதை வரிகளும்,விமர்சனமும் அருமை! நான் வெறும் வார்த்தைகளால் மட்டுமே பாராட்டினேன்.ஒருபடி மேலே போய் கவிதையாகவும்,முழுமையான விமர்சனமாகவும் உங்கள் நண்பர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.அருமை!

    பதிலளிநீக்கு
  6. அப்புடி எல்லாம் ஒருமாதத்துக்கு லீவு போட்டுட்டு ஓட முடியாது பாஸ்.....

    பதிலளிநீக்கு
  7. பதிவுக்கு முன் அதென்ன சிலமாத இடைவெளி...உதை விழும்.என்ன பிரச்சனையெண்டு சொல்லிப்போட்டுப் போங்கோ துஷிக்குட்டி.கொஞ்ச ஓய்வு போதும் சின்னப் பெடியனுக்கு !

    இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைச்சிருக்கு.பிறகென்ன.அடுத்த தொடர் பதிவைப் பயமில்லாமல் தொடரலாம்.வாழ்த்துகள் துஷியா.என் அன்பும் எப்பவும் உங்களோட !

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் மருமோனே!
    அருமையான கவிதை தந்து வாழ்த்திய மாப்பிளைக்கும்.. குறைகளையும் சுட்டிக்காட்டி நல்ல விமர்சனமும் தந்த தனி மரம் நேசன் போன்றோர் வாழ்த்துக்களும் உங்களுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பை தருகின்றது.!!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா12:34 AM, ஜனவரி 09, 2012

    மகேந்திரன் அண்ணை கதைக்கு ஏற்றாபோல கிராமத்து நடையில் ஒவ்வொரு பாகங்களாக கவிதையாக வடித்த விதம் மிகவும் சிறப்பாக உள்ளது...

    தனிமரம் அண்ணாச்சியும் நன்றாக உங்கள் தொடரை கவனிச்சுள்ளார்.. அவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. அடிக்கடி கேப் விட்டா கேப்மாரின்னு சொல்லிடுவாங்களோ? ஹி ஹி

    பதிலளிநீக்கு
  11. துஷி, கேப் வேண்டாம்! அப்படி என்ன அவசர வேலை?

    பதிலளிநீக்கு
  12. மகேந்திரனின் கவிதை அழகு!
    நேசன் அண்ணாவின் விமர்சனம் ஆச்சரியம்!

    பதிலளிநீக்கு
  13. மகேந்திரன் மிக ஆழமாக வாசித்து கவிதை படைத்திருக்கிறார்.நேசன் இப்படி எழுதியது சாத்தியமே! நல்ல விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  14. மகேந்திரன் இனிமையான கவிபடைத்திட்டார் அவரிற்கும், நீண்ட விமர்சனம் தந்த நேசனிற்கும் வாழ்த்துக்கள். துஷி இத்தொடர் உங்களிற்கு பெரும் அங்கீகாரம் தந்திருக்கிறது. தொடர்ந்தும் நல்ல படிப்புக்களாக தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா6:40 PM, ஜனவரி 10, 2012

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    மகேந்திரனின் கவிதை ...நேசன் விமர்சனம் அழகு...

    பதிலளிநீக்கு
  16. ஐயா..
    மன்னிக்கவும்.
    கொஞ்சம் தாமதம்.

    தொடரைப்பற்றி நானும் ஒரு விமர்சனம் அனுப்புகிறேன்-பிரசுரிப்பிற்காகவல்ல.தங்களின் தனிப்பட்ட பார்வைக்கு மட்டும்.

    அடுத்த காதல்க்காவியத்திற்கு காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு

  17. வணக்கம்!
    வலைச்சரம் கண்டேன்! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...